ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்து செவிப்புலனற்றோர் இன்று (12.03) வவுனியாவில் விழிப்புணர்வு பேரணியொன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது பேச்சு மற்றும் கேட்டல் சிரமமுடைய மாணவர்கள் சாதாரண பாடசாலைகளில் க.பொ.த. சாதாரண தரக் கல்வியை கற்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளல், அரச வேலைவாய்ப்பில் விசேட தேவையுடையோர் உள்வாங்கப்பட வேண்டும், பொது வைத்தியசாலை, மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் ஆகியவற்றில் சைகை மொழி தெரிந்தவர்கள் மொழிபெயர்ப்பாளர்களாக பணிக்கு அமர்த்தப்படவேண்டும்,
பொருத்தமான விசேட தேவைக்குட்பட்டோருக்கு பொருத்தமான சாரதி அனுமதி பத்திரத்தை வழங்குதல் வேண்டும், தேவைக்குட்பட்டோருக்கான 3000 ரூபா கொடுப்பனவை அனைத்து விசேட தேவையுடையோருக்கும் வழங்குதல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன்னிருந்து பேரணியாக சென்றவர்கள், இது குறித்த மகஜரை வவுனியா அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளனர்.
இதனையடுத்து வவுனியா அரசாங்க அதிபர் சாரதி அனுமதிப்பத்திர முறைமைக்கு தற்போது தீர்வினை பெற முடியாது எனவும், ஏனைய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்திருந்ததுடன் பேரணியில் ஈடுபட்டவர்களிடம் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார்.