உடல் உறுப்புகளை அறுத்து எடுக்க முயன்றபோது விழித்தெழுந்த பெண்!!

599

body

மூளைச்சாவு அடைந்து விட்டதாக கருதப்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகளை வைத்தியர்கள் எடுக்க முயன்றபோது, அந்த பெண் கண் திறந்து, வைத்தியர்களை அதிர்ச்சியடையச் செய்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

இதனால் தவறாக சிகிச்சை அளித்த மருத்துவமனைக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரைச் சேர்ந்தவர் 41 வயதான கொல்லின் பேர்ன்ஸ். இவர் கடந்த 2009 ஒக்டோபரில் அதிகளவில் மருந்துகளை சாப்பிட்டதால் நினைவிழந்தார்.

பின்னர் நியூயோர்க்கில் உள்ள சென்ட் ஜோசப் மருத்துவமனையில் பேர்ன்ஸ் அனுமதிக்கப்பட்டார்.
இவருக்கு வைத்தியர்கள் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை. அவர் சாப்பிட்ட மருந்தால் அவரது வயிறு, குடல் பகுதிகள் பாதிக்காமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.



அவரது வயிற்றில் மருந்து தங்கியுள்ளதா என சோதனையிடவில்லை. மூளை செயல்படுகிறதா என்று ஸ்கேன் பரிசோதனை செய்யவில்லை. ஆனால், நீண்ட நாளாகியும் அவர் நினைவு திரும்பாததால் அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக வைத்தியர்கள் முடிவெடுத்து விட்டனர்.

பேர்ன்ஸ் கிட்டத்தட்ட இறந்து விட்டார் என்று அவரது உறவினர்களிடம் வைத்தியர்கள் கூறவே அவர்களும் பேர்ன்ஸ் உயிரை காப்பாற்ற வைக்கப்பட்டிருந்த உபகரணங்களை அகற்ற சம்மதித்தனர்.

மேலும், அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்கவும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து பேர்ன்ஸ் உறுப்புகளை எடுக்க வைத்தியர்கள் முடிவு செய்தனர். உடலை வெட்டி உறுப்புகளை எடுப்பதற்கு முன் சில சோதனைகளை மருத்துவ தாதி செய்தபோது அவரது உடலில் அசைவு தெரிந்தது.

சத்திரசிகிச்சை அறைக்கு அழைத்துச் சென்றபோது அவரது உதடு, நாக்கு அசைந்ததை அந்த மருத்துவ தாதி கவனித்துள்ளார்.
ஆனால், தாதி கூறியதை வைத்தியர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அறுவை சிகிச்சைக்கு முன் பேர்ன்ஸ்க்கு நரம்புகளை அமைதிப்படுத்தும் மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டது.

அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக அவர் திடீரென கண் விழித்தார். அவ்வளவு பேரும் ஆடிப் போய் விட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில், சென்ட் ஜோசப் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது உறுதியானதால் மருத்துவமனைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் மருத்துவமனையின் தரத்தை உறுதி செய்ய ஆலோசகரை நியமிக்கவும், மூளைச்சாவு அடைந்ததை கண்டுபிடிக்க நரம்பியல் நிபுணர் மூலம் தனது ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் அந்த மருத்துவமனைக்கு உத்தரவிடப்பட்டது.