விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில் ஒன்றுக்கு சென்ற நடிகை சுகன்யா, தனது கனவில் வரும் கடவுள் சிலைகளை தோண்டி எடுக்குமாறு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அருகே திருநந்திபுரம் கிராமத்தில் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பழமை வாய்ந்த செம்மனேரி ஆண்டவர் கோயில் மற்றும் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் பிரபல நடிகை சுகன்யாவின் குலதெய்வம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 9.30 மணியளவில் சுகன்யா தனது உறவினர்களுடன் செம்மனேரி ஆண்டவர் கோயிலுக்கு சென்றதை அறிந்த ஊராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் பொதுமக்கள் கோயிலுக்கு விரைந்தனர்.
அப்போது பேசிய சுகன்யா, இக்கோயிலின் எதிரே உள்ள ஆலமரத்தின் அடியில், சிலைகள் மண்ணில் புதைந்துள்ளது போல் எனக்கு அடிக்கடி கனவு வருகிறது. எனவே அந்த இடத்தில் பள்ளம் தோண்டி பார்க்க ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து கோவிலுக்கு விரைந்த பெரியதச்சூர் துணை ஆய்வாளர் , இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் ஆகியோர் நடிகை சுகன்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அவர்கள் சுகன்யாவிடம், வருவாய் துறையினரின் அனுமதி பெற்ற பிறகு தான் அந்த இடத்தில் பள்ளம் தோண்ட முடியும் என்றும், நீங்கள் வருவாய்துறையினரிடம் அனுமதி பெற்று வாருங்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதைகேட்ட பின்னர் நடிகை சுகன்யா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.