400வது ஒரு நாள் போட்டியில் விளையாடுகின்றார் மஹேல ஜெயவர்தன!!

410

mahelaஇலங்கை அணியின் அனுபவ வீரர் மஹேல ஜெயவர்தன தனது 400வது ஒரு நாள் போட்டியில் இன்று விளையாடுகிறார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக அளவில் விளையாடிய வீரர்கள் மிகவும் குறைவானவர்களே உள்ளனர்.

இந்த வரிசையில் தற்போது இணைகின்றார் மஹேல ஜெயவர்தன. மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்து வரும் முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் இன்று விளையாடுகின்றன .

இந்தப் போட்டி ஜெயவர்த்தனவுக்கு 400வது ஒரு நாள் போட்டியாகும். இதன் மூலம் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், இலங்கையின் சனத் ஜெயசூர்யாவுடன் இணைகிறார் ஜெயவர்த்தன.

அதிக போட்டிகளில் விளையாடிவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் சச்சின்தான். அவர் இதுவரை 463 போட்டிகளில் விளையாடியுள்ளார் . சனத் ஜெயசூர்ய 2வது இடத்தில் 445 போட்டிகளுடன் இருக்கிறார்.

ஆனால் இந்த இரண்டு வீரர்களும் ஓய்வு பெற்று விட்டனர். டெண்டுல்கர் கடந்த ஆண்டும், ஜெயசூர்ய 2011ம் ஆண்டும் ஓய்வை அறிவித்தனர்.

1998ம் ஆண்டு முதல் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறார் ஜெயவர்தன. அவர் 138 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஒரு நாள் போட்டியில் 11,237 ஓட்டங்களையும், டெஸ்ட் போட்டிகளில் 10,806 ரன்களும் மகேள ஜெயவர்தன குவித்துள்ளார்.

தற்போது அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சாதனையை முறியடிக்கும் சந்தர்ப்பம் மஹேல ஜெயவர்தனவிற்கு கிடைத்துள்ளது. சாதனை படைப்பாரா மஹேல, பொறுத்திருந்து பார்ப்போம்.