வவுனியாவில் உயிரிழந்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டார் : சிறுவர் நன்னடத்தைப் பிரிவு!!

769

Capture

வவுனியா கனகராயன்குளத்தைச் சேர்ந்த செல்வராஜா சரண்யா என்ற சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமைக்கான தடயங்கள் உள்ளதாக சட்ட வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாக வவுனியா சிறுவர் நன்னடத்தைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவரது மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கனகராயன் குளம் – மன்னகுளம் பகுதியைச் சேர்ந்த 15 வயதான எஸ்.சரண்யா கடந்த மாதம் 27ம் திகதி மரணமானார். கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்த இந்த சிறுமி மிகவும் வறுமைப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். பெற்றோர் இல்லாத நிலையில், தனது அம்மம்மாவுடன் வாழ்ந்து வந்தார்.

இவர் சில மாதங்களுக்கு முன்னர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமைக்கான தடயங்கள் சட்ட வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் நன்னடத்தைப் பிரிவு குறிப்பிட்டது.

எனினும், சிறுமியின் மரணத்திற்கான காரணம் இருதய மற்றும் மூளை தொடர்பான பாதிப்பு என குறித்த வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் நன்னடத்தைப் பிரிவு மேலும் தெரிவித்தது.

எனினும், இந்தச் சிறுமியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

தொடர்புபட்ட செய்தி : வவுனியாவில் 16 வயது மாணவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளான சம்பவம் குறித்து விசாரணை!!