வவுனியா இளைஞர்களின் கூட்டு முயற்சியில் உருவான தமிழ் மாமன்றம் வன்னிப் பாடசாலை மாணவர்களிடையே அவர்களின் கலை இலக்கியத் திறனை வளர்க்கும்முகமாக பல்வேறுபட்ட பயிற்சி மற்றும் போட்டி நிகழ்வுகளை தொடர்ச்சியாக நடாத்தி வருகின்றது.
இம் மன்றம் கடந்தவருடம் வவுனியா மண்ணில் “முத்தமிழ் விழா” எனும் வரலாற்று நிகழ்வை முதல்முறையாக அரங்கேற்றி சாதனை படைத்தது. இதன் தொடர்ச்சியாக இவ் வருடம் “தமிழ் மாருதம் 2015” எனும் நிகழ்வை நடாத்தவுள்ளது. இது தொடர்பாக தமிழ் மாமன்றத்தினர் விடுத்த ஊடக அறிக்கை வருமாறு..
எமது பிரதேச கலை இலக்கிய ஆர்வலர்களை ஒருங்கிணைக்கும் நோக்குடன் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் மாமன்றம் மூலம், எதிர்காலத்தில் எமது பிரதேச மாணவர்களின் திறன்விருத்திக்கு எம்மால் முடிந்தவரை பங்களிப்பதுடன் எமது ஆர்வத்துக்கும் வெளிப்பட்டுக்கும் எம்மாலேயே களம் அமைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றோம்.
அந்தவகையில் கடந்த வருடத்தில் இயல் விழா எனும் மாபெரும் விழாவினை நடத்தி அதில் வெற்றியும் கண்டோம். இந்தமுறை இயல் இசை நாடகம் எனும் முத்தமிழையும் பிரதிபலிக்கும் வகையில் “தமிழ் மாருதம் 2015” நடைபெறவுள்ளது.
சித்திரை மாதம் பன்னிரெண்டாம் திகதி காலை மற்றும் மாலை எனும் இரு அமர்வுகளாக வவுனியா கலாசார மண்டபத்திலே நடைபெறவுள்ளது, உங்கள் அனைவரின் வருகையினை எதிர்பார்த்து நிற்கின்றோம்.
நன்றி
ந.கிருத்திகன்
ஊடக இணைப்பாளர்
தமிழ் மாமன்றம்..