ரோஹித் ஷர்மாவிற்கு நடுவர்கள் சாதகமாக செயல்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள வங்கதேசத்தை சேர்ந்த ஐ.சி.சி. தலைவர் முஸ்தபா கமால் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டியுள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில் இந்திய அணியின் துடுப்பாட்டக்காரர் ரோஹித் சர்மா 90 ஓட்டங்கள் எடுத்து ஆடிக் கொண்டிருந்தார்.
அப்போது வங்கதேச பந்துவீச்சாளர் ருபெல் ஹூசைன் நேரடியாக வீசிய பந்தில் ரோஹித் சர்மா பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் அந்தப் பந்து இடுப்புக்கு மேலாக வந்தது என கருதி பாகிஸ்தான் நடுவர் அலீம் தார் முறையற்ற பந்து என்று உடனடியாக அறிவித்தார்.
பின்னர் சக நடுவர் இயன் கவுல்டும் அவரது முடிவை ஏற்றுக் கொண்டார். இதனால் தொடர்ந்து விளையாடி ரோஹித் சர்மா சதம் அடித்தார்.
இதைத் தொடர்ந்து டி.வி. ரீப்ளேயில் பார்த்த போது, அந்தப் பந்து இடுப்புக்கு கீழாக வந்தது தெரியவந்தது. இதையடுத்து நடுவரின் தவறான தீர்ப்பால் தான் தோல்வி ஏற்பட்டதாக வங்கதேச ரசிகர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக உள்ள வங்கதேசத்தை சேர்ந்த முஸ்தபா கமாலும் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
இது குறித்து முஸ்தபா கமால் கூறுகையில், நான் பார்த்தவரைக்கும் நடுவரின் தீர்ப்பு மிகமோசமாக இருந்தது.
முன்கூட்டியே திட்டமிட்டு இவ்வாறு நடந்து கொண்டது போல் தோன்றுகிறது. வேண்டுமென்றே இவ்வாறு தீர்ப்பு வழங்கினார்களா என்பது பற்றி ஐ.சி.சி. தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் அடுத்த கூட்டத்தில் ஐ.சி.சி. தலைவராக இந்த விடயங்களை நிச்சயம் பேசுவேன் என்றும், இந்த விவகாரத்தில் நான் பதவியை ராஜினாமா செய்வதற்கும் வாய்ப்புள்ளது எனவும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதற்கிடையே ஐ.சி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில், முஸ்தபா கமாலின் கருத்து துரதிர்ஷ்டவசமானது. ஐ.சி.சி. தலைவராக முஸ்தபா கமால் தனது கருத்துகளை நன்கு யோசித்து பொறுப்புடன் சொல்லியிருக்க வேண்டும்.
நடுவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு குறித்து கேள்வி எழுப்ப முடியாது என்றும், எது எப்படி என்றாலும் நடுவரின் தீர்ப்பே இறுதியானது, அதற்கு எல்லோரும் மதிப்பு கொடுத்தாக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.