உத்தரபிரதேசத்தில் கற்பழிக்கப்பட்ட சிறுமியின் நாக்கை துண்டித்துள்ளனர். அவர் வரும் 24ம் தேதி வாக்குமூலம் அளிக்கவிருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி 3 பேரால் கற்பழிக்கப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். ஆனால் மற்ற இருவர் இன்னும் சிக்கவில்லை. இந்த வழக்கில் சிறுமியின் தந்தை நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
சிறுமி வரும் 24ம் தேதி வாக்குமூலம் அளிக்கவிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு சிறுமியின் நாக்கை துண்டித்துவிட்டனர். இதையடுத்து சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கற்பழிப்பு வழக்கை வாபஸ் பெறுமாறு தங்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக சிறுமியின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.