இம்முறை உலகக் கிண்ணம் எங்களுக்குதான் என்பதில் சந்தேகமேயில்லை, எங்களை யாராலும் தடுக்க முடியாது, என தென்னாபிரிக்க அணித் தலைவர் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
நாளை நடைபெறவுள்ள உலகக் கிண்ண முதலாவது அரையிறுதி போட்டியில், நியூசிலாந்து-தென்னாபிரிக்க அணிகள் பலப் பரீட்சை நடத்த உள்ளன.
இதற்காக இரு நாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது பத்திரிகையாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே தென்னாபிரிக்க அணித் தலைவர் டி வில்லியர்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
தென்னாபிரிக்க அணி தற்போது மிகுந்த தன்னம்பிக்கையுடன் உள்ளது. காலிறுதிச் சுற்றுகளில் வெற்றி பெற்றதில்லை என்ற அவப்பெயரை இந்த உலகக் கிண்ண போட்டியில் நீக்கியுள்ளோம்.
தென்னாபிரிக்க அணி தனது முழுப் பலத்தோடு விளையாடினால், அதை எந்த அணியாலும் தடுக்க முடியாது.
உலகக் கிண்ணத் தொடர்களில் மட்டும் தென்னாபிரிக்க அணி சிறப்பாக ஆடுவதில்லை என்ற அவப்பெயர் இருந்தது. அத்தனை உணர்ச்சிவசங்களுக்கு மத்தியிலும் மோதி, போராடி வெற்றி பெற்றுள்ளோம்.
பழைய கதைகள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. அன்றைய போட்டியில் எப்படி விளையாடுகிறோமோ அதைப் பொறுத்துதான் வெற்றி, தோல்வி அமையும் என்பதில் மட்டுமே எனக்கு நம்பிக்கையுள்ளது.
உலகக் கிண்ண தொடர்களில் தென்னாபிரிக்கா இதற்கு முன்பு பல சோதனைகளை சந்தித்துள்ளது. ஆனால் இம்முறை நாம் புத்துணர்ச்சியுடன் உள்ளோம். நியூசிலாந்துக்கு எதிராக நாளை இடம்பெறவுள்ள போட்டியை ஆவலோடு எதிர்பார்த்து காத்துள்ளோம்.
நியூசிலாந்து பந்து வீச்சாளர் அடம் மில்னே காயத்தால் விலகியிருப்பது அவர்களுக்கு பெரும் இழப்புதான். ஆனால், என்னைப் பொறுத்தவரை, பிற அணிகளின் நிறை, குறைகளை அதிகமாக அலசி ஆராய்ந்து கொண்டிருப்பதில் விருப்பமில்லை.
எங்கள் அணி எப்படி விளையாடுகிறது என்பது மட்டுமே எனக்கு முக்கியம். தென்னாபிரிக்க அணி சிறப்பாக ஆடினால், கண்டிப்பாக வெற்றி எங்களுக்குதான் கிடைக்கும்.
இதேவேளை, காலிறுதியில் அப்படி ஒரு அபார வெற்றி பெற்ற பிறகு, அணியை மாற்றம் செய்வது கஷ்டமான காரியம்தான். ஆனாலும், சில மாற்றங்கள் அணியில் செய்யப்படலாம் என டிவில்லியர்ஸ் மேலும் தெரிவித்தார்.