கர்ப்பிணி தாய்மார்களுக்கு புழுக்கள் அடங்கிய பொருட்களை வழங்கிய மூவருக்கு விடுதலை : சாரதி கைது!!

525

கர்ப்ப்பிணித் தாய்மார்களுக்கு புழுக்கள் அடங்கிய பொருட்களை வழங்கிய கினிகத்தேனை பகுதியில் உள்ள மூவரிடம் நீதிமன்றம் தண்டப்பணம் அறவிட்டு, விடுதலை செய்துள்ளது.

ஒரு தனியார் தொகை கடை உரிமையாளருக்கும், இவ்வாறான பொருட்களை பெற்றுக்கொண்ட கினிகத்தேனை கூட்டுறவு சங்கத்தின் தலைவருக்கும், பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த உத்தியோகத்தர் ஒருவருக்கும் தலா 15000 ரூபா படி 3 பேருக்கும் 45000 ரூபா தண்டப் பணமாக அறிவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி நபா்களை நேற்று ஹற்றன் நீதவான் ஐ.பி.டி.லியனகே முன்னிலையில் ஆஜர்ப்படுத்தும்போது மேற்படி நபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் காரணமாக நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசணை பொருட்கள் வழங்கும் நிகழ்வு 21.03.2015 அன்று நோர்வூட் வெஞ்சர் பகுதியில் இடம்பெற்றது.

இவ்வாறு வழங்கிய போசனை பொதியில் கெளப்பீ 1 கிலோ, பருப்பு 1 கிலோ, பயறு 1 கிலோ, கடலை 1 கிலோ, சோயா 500 கிராம், நெத்தலி 500 கிராம், செமன் டின் 2, சிவப்பு அரிசி 2 கிலோ ஆகியன அடங்கிய பொதியையே வழங்கியுள்ளனர்.

இவ்வாறு வழங்கிய பொதியை பார்க்கும்போது அதில் இருந்த கெளப்பீ, கடலை, நெத்தலி ஆகியவற்றில் புழுக்கள் இருக்கின்றதாக பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கர்ப்பிணி தாய்மார்கள் முறையிட்டுள்ளனர்.

இதனையடுத்து பொதிகள் வழங்கிய இடத்திற்கு விரைந்த சுகாதார பரிசோதகா்கள் அதனை சோதனை செய்யும் போது இவ்வாறு 130 பொதிகளில் புழுக்கள் இருந்ததை உறுத்திப்படுத்தினார்கள்.

அதன்பின் இந்த அத்தியாவசிய பொருட்களை வழங்கிய கினிகத்தேனை பகுதியில் உள்ள ஒரு தனியார் தொகை கடையை 22.03.2015 அன்று பொகவந்தலாவ சுகாதார பரிசோதகர்கள் சுற்றி வளைப்பினை மேற்கொண்டபோது அங்கு விற்பனைக்காக பாவிக்கமுடியாத நிலையில் இருந்த சில அத்தியா வசிய பொருட்களை சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றிருந்தமை குறிப்பிடதக்கது.

அத்தோடு 23.03.2015 அன்று ஹற்றன் நீதவான் முன்னிலையில் இவ்விடயத்தை ஆஜர்ப்படுத்தும் போது பாவிக்க முடியாத நிலையில் இருந்த பொருட்களை அழிக்குமாறு சுகாதார பரிசோதகருக்கு நீதவான் உத்திரவிட்டதையடுத்து, அப்பொருட்கள் நேற்று சுகாதார பரிசோதகர் பி.எல்.கே வசந்தவினால் அழிக்கப்பட்டது.

1 2 3 4 5 6