நியூசிலாந்து – தென்னாபிரிக்க அணிகள் நேற்று மோதிய உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் அரைஇறுதி ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருந்தது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து 1 பந்து எஞ்சி இருந்த நிலையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் விளையாடிய தென்னாபிரிக்க அணி 43 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 281 ஓட்டங்கள் குவித்தது. மழையால் டக்வத் லுவிஸ் விதிப்படி நியூசிலாந்துக்கு 298 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 42.5 ஓவரில் 6 விக்கெட் இழந்து 299 ஓட்டங்கள் எடுத்தது.
இதனால் நியூசிலாந்து அணி முதல் முறையாக உலக கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதற்கு முன்பு 6 முறை (1975, 1979, 1992, 1999, 2007, 2011) அந்த அணி அரைஇறுதிப் போட்டியில் தோற்று இருந்தது. தென்னாபிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. நியூசிலாந்து அணியின் தலைவர் மக்கலம் நிருபர்களிடம் கூறியதாவது..
தென்னாபிரிக்க அணி எப்போதும்போல் சிறப்பாக விளையாடியது. இந்த ஆட்டம் கிரிக்கெட் விளையாட்டுக்கு மிகப்பெரிய விளம்பரமாகும். இந்த போட்டியுடன் சம்பந்தப்பட்ட வீரர்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்து இருப்பார்கள்.
எங்களுக்கு வாழ்நாளில் மறக்க இயலாத மகிழ்ச்சி நேரமாகும். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த மைதானத்தில் திரண்டு இருந்த ரசிகர்களின் உற்சாகம் ஒரு காரணம்.
நாங்கள் 3 துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் கடைசி வரை போராட வேண்டியிருந்தது. எலியட் மிகவும் அருமையாக விளையாடினார். தொடக்கத்திலேயே ஓட்ட சராசரியை உயர்த்தியதால் நெருக்கடி குறைந்தது. இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய தென்னாபிரிக்காவுக்கு எனது பாராட்டுக்கள்.
அந்த நேரத்தில் யாருடன் மோதப் போகிறோம் என்பது பற்றி கவலை இல்லை. இரு அணிகளுமே தலைசிறந்தவையாகும். இதே மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் எங்களுக்கு வாய்ப்பு இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.