பயங்கரவாத பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட ஜெயக்குமாரியின் மகள் விபூசிகாவை தாயாருடன் ஒப்படைக்க கிளிநொச்சி நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
ஜெயக்குமாரி கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். இதன் காரணமாக அவருடைய மகள் விபூசிகா நீதிமன்றின் உத்தரவின் பேரில் கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் அண்மையில் நிபந்தனைப் பிணையில் விடுதலை செய்யப்பட்ட ஜெயக்குமாரி தனது மகளை தன்னுடன் சேர்க்குமாறு கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று காலை கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வஹாப்தீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ் வழக்கில் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் சார்பில் ஆஜராகியிருந்த அதிகாரிகள், விபூசிகாவை அவருடைய தாயாருடன் இணைப்பதில் ஆட்சேபனை இல்லை என நீதிமன்றில் தெரிவித்தனர்.
அதன் பின்னர் விபூசிகாவை ஜெயக்குமாரியுடன் சேர்ப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.