உயிரைக் காவுகொண்ட கண்ணாடிப் பாளங்கள் : சம்பவத்தை பார்த்த கடை உரிமையாளருக்கு மாரடைப்பு : ஓர் பரிதாப சம்பவம்!!

740

Glass

கண்ணாடிப் பாளங்கள் (சீட் கிளாஸ்) விற்பனை செய்யும் நிறுவன களஞ்சிய அறையில் கண்ணாடிப் பாளங்கள் சரிந்து விழுந்ததில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் 28 வயது இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக மரண மடைந்துள்ளார். இதைப் பார்த்த கடை உரிமையாளருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்டி, மஹய்யாவைப் பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் மரணித்தவர் கெலிஓயாப் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் எனத் தெரிய வருகிறது.

சுமார் 120 கிலோ எடைகொண்ட சீட் கண்ணாடிகளே இவர் மீது விழுந்துள்ளன. இவர் கண்ணாடிப் பாளங்களை கையாழும்போது இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் நடக்கும் போது நேரில் யாரும் காணவில்லை எனத் தெரிவிக்கப் படுகிறது.பின்னர் ஸ்தலத்திற்கு கண்டி மாநகர சபையின் தீயணைக்கும் பிரிவினர் அழைக்கப்பட்டு காயமடைந்தவரை வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்ல எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

அதே நேரம் கண்ணாடி களஞ்சிய உரிமையாளர் ஸ்தலத்திற்கு வந்த போது சம்பவத்தை நேரில் கண்டதினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருதயப் பாதிப்பிற்குள்ளாகி கண்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.