வவுனியா, ஓமந்தை பகுதியில் உள்ள தமது நிலத்தை மன்னார் ஆயர் இல்லத்தை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பதாகவும் அதனை தடுத்து நிறுத்துமாறு கோரியும் அக் காணி உரிமையாளர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
நேற்று புதன்கிழமை மாலை வவுனியா, ஓமந்தை, பாக்கு சொறிந்தான் புளியம்வளவில் அமைதியான முறையில் காணி உரிமையாளர்களால் இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, ஓமந்தை, மகிழங்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள பாக்கு சொறிந்தான் புளியம் வளவில் உள்ள காணிகளில் தனியார் 7 பேருக்கு சொந்தமான காணிகளை மன்னார் ஆயர் இல்லத்தைச் சேர்ந்தவர்கள் தம்மை அச்சுறுத்தி கையகப்படுத்த முயல்வதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
குறித்த காணியை 1965 ஆம் ஆண்டு முதல் உறுதி மூலம் உடமையாக கொண்டிருந்த நபர் ஒருவரிடம் இருந்து தாம் கடந்த 2010 ஆம் ஆண்டு பணம் கொடுத்து சட்ட ரீதியாக பெற்றுக் கொண்டதாகவும், அக் காணிக்குரிய உறுதிப் பத்திரங்கள், நில அளவைப் பத்திரம், மற்றும் காணி உரிமை பரிமாற்ற புத்தகத் தொகுப்பு போன்ற ஆவணங்கள் அனைத்தும் மாவட்ட செயலகத்தில் முன்னைய நபரிடம் இருந்து பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமக்கு வழங்கப்பட்டு விட்டதாகவும் அதனை வைத்து வங்கியிலும் கடன் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கும் அவர்கள், தற்போது தமது நிலத்தை தமக்கு சொந்தமான நிலம் எனக் கூறி ஆயர் இல்லத்தைச் சேர்ந்தவர்கள் வந்து அடாத்தாக காணியை துப்பரவு செய்ய முயற்சிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் மன்னார் ஆயருடன் கதைப்பதற்கு பல முறை முயன்றும் பயனற்று போயுள்ளதாகவும் குறிப்பிடும் இவர்கள் தமது நிலம் தொடர்பாக ஏற்படும் அச்சுறுத்தல் தொடர்பாக ஓமந்தை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
சட்ட ரீதியான ஆவணங்களை பரிசீலித்தே தாம் நிலங்களை பெற்றதாகவும் தமது நிலத்தை விடுவித்து தம்மை வாழ வழியேற்படுத்தி தருமாறும் அவர்கள் சம்மந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.






