தாயின் கரங்களில் சாய்ந்தபடியே உயிரை விட்ட ஹேய்லே ஓகினெஸ்!!

546

OSA

தெற்கு இங்கிலாந்தின் கிழக்கு சஸ்ஸெக்ஸ் நகரின் அருகேயுள்ள பெக்ஸ்ஹில் பகுதியைச் சேர்ந்தவர், ஹேய்லே ஓகினெஸ்.

17 வயது பெண்ணான இவர், கொடிய நோயான ’ப்ரோகேரியா’ (Progeria) எனப்படும் வயது மூப்பு நோயால் பிறவியில் இருந்தே பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சராசரி மனிதர்களைவிட 8 மடங்கு அதிகமாக வயது மூப்பை அடைந்து விடுவர். அதாவது, இவர்களுக்கு 10 வயதாகும்போதே 80 வயதை அடைந்தவர்களுக்குரிய உடல் தளர்ச்சியையும், முதுமையையும் இவர்கள் அடைந்து விடுவர். இவர்கள் சராசரியாக 13 வயது வரை மட்டுமே உயிர்வாழ முடியும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நோயை குணப்படுத்தும் மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளர்கள் தங்களது கண்டுபிடிப்புகளை ஹேய்லே ஓகினெஸ்க்கு அளித்து இவரை ஒரு ஆய்வுப் பொருளாக பயன்படுத்தி வந்தனர்.

இதுதவிர, ´காலத்தை கடந்த எனது மூப்பு´ என்ற தலைப்பில் தனது வாழ்க்கை வரலாற்றை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் புத்தகமாகவும் எழுதியிருந்தார். இந்த புத்தகத்தின் மூலம் ஹேய்லே ஓகினெஸ் மிகவும் பிரபலம் அடைந்தார். அது மட்டுமின்றி, உலகளாவிய அளவில் ´ப்ரோகேரியா´ தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்லெண்ண தூதராகவும் ஹேய்லே ஓகினெஸ் செயல்பட்டு வந்தார்.

இவரது மருத்துவ சிகிச்சைக்கு கருணை மனமும், ஈகை குணமும் கொண்ட பலர் நிதியுதவி அளித்து வந்தனர்.

இந்நிலையில், தனது 17 வயதில் ஹேய்லே ஓகினெஸ் இயற்கையோடு இணைந்து விட்டதாக இவரது தாயார் அறிவித்துள்ளார்.

´என் குழந்தை வேறொரு நல்ல இடம்தேடி சென்றுவிட்டாள். இரவு (நேற்று முன்தினம்) 9.39 அளவில் எனது கரங்களில் சாய்ந்தபடி தனது இறுதி மூச்சை ஹேய்லே ஓகினெஸ் நிறுத்திக் கொண்டாள்´ என இவரது தாயார் கெர்ரி மரண அறிவிப்பாக வெளியிட்டுள்ளார்.

இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவ ஆரம்பித்ததும் இலட்சக்கணக்கான மக்கள் ஹேய்லே ஓகினெஸ்-ன் ஆன்மா சாந்தியடைய அனுதாப செய்திகளை பகிர்ந்து வருகின்றனர்.