சுயநல அரசியல்வாதிகளின் கைகளினால் கறை படிந்து கொண்டிருக்கும் தூய்மையான அரசியலை காப்பாற்றி, உண்மையான அரசியல் பணி செய்ய இளைஞர்கள் தயாராக வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் (04.04) நடைபெற்ற வவுனியா பிரதேச இளைஞர் சம்மேளன கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்..
சில சுயநல அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளினால் நீங்கள் அரசியலில் ஈடுபடுவதை தவிர்த்திருக்கலாம். கடந்த காலங்களில் தமிழ் இளைஞர்கள் அரசியலில் பிரவேசிக்கும் போது அரசாங்கம் சந்தேகம் கொண்ட ஒரு நிலைமை இருந்தது.
துப்பாக்கி கலாசாரம் மேலோங்கியிருந்தது. சாதாரண இளைஞர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தது. அதனால் நீங்கள் அரசியலில் ஈடுபட அச்சப்பட்டீர்கள். இன்று அந்த நிலைமை மாறியுள்ளது. நீங்கள் தேர்தலிலும், அரசியலிலும் ஈடுபட நாம் வாய்ப்புக்கள் வழங்க தயாராக இருக்கின்றோம்.
நேர்மையான, உண்மையான அரசியல் பணி செய்ய நீங்கள் தயாராக வேண்டும். ஒரு சில அரசியல்வாதிகள் செய்கின்ற தவறுகளால் ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் விமர்சிக்கப்படுகின்றார்கள்.
சமூக, சமூதாய பணிகளில் நீங்கள் வெற்றிகொண்டால் அரசியல் பணிகளிலும் உங்களால் வெற்றிகொள்ள முடியும். எமது மக்கள் எதிர்பார்க்கின்ற மாற்றங்களை உங்களால் கொண்டுவர முடியும்.
அண்மைய அரசியல் மாற்றத்தில் இளைஞர்களின் பங்களிப்பு இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அரசியலோடு சமூக, பொருளாதார, கல்வி போன்ற விடயங்களிலும் இளைய சமூதாயம் புரட்சிகர சிந்தனைகளுடன் போராட முன்வர வேண்டும் என தெரிவித்தார்.