இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேமி-எய்மி தம்பதியருக்கு பிறந்த அழகான ஆண் குழந்தை கோல்பி. பிறக்கும் போதே கோல்பியின் வலது கண் இமையின் மேல் ஒரு சிறிய கட்டி இருந்தது. பிறந்த ஒரு சில வாரங்களுக்குள் ஒரு முட்டையின் அளவிற்கு கட்டி பெரிதாக வளர்ந்து விட்டது.
இதனால் ஒரு கண் மருத்துவர்கள் அதை ஒரு வகை அரிய கட்டியான ’ஹெமாங்கியாமோ’ என்று குறிப்பிடுகின்றனர். இந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து நீக்கினாலும், கட்டியுள்ள கண்ணின் பார்வை பறிபோய் விடும்.
23 வயதான ஜேமி ஒரு ஹார்ட்வேர் கடையில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி எய்மி திறந்த நிலைப் பல்கலைகழகத்தில் ஆங்கிலம் படித்துக் கொண்டிருந்தார். தன் குழந்தையின் மோசமான நிலைமையை தாங்க முடியாத இருவரும் இங்கிலாந்தின் தேசிய சுகாதார மையத்தில் விண்ணப்பித்து கோல்பியின் அறுவை சிகிச்சைக்காக காத்திருந்தனர்.
ஆனால் அது மிகவும் தாமதமானது. அந்த நாட்களில், கோல்பி தனது கட்டியைத் தொட்டு சிரித்து விளையாடும் போது இருவரின் மனதிலும் நரக வேதனை உண்டாகும். தங்களுடைய குழந்தையை குணமாக்க முடியவில்லையே என்ற குற்றவுணர்ச்சி ரணமாய் கொல்லும்.
இதற்கிடையில் கோல்பியை பரிசோதித்த மருத்துவர்கள் தங்கள் விஷமத்தனமான பேச்சினால் அவர்களை மேலும் காயப்படுத்தினர். ”நீங்கள் ஏன் இந்த கட்டியை அகற்ற முயற்சி செய்கிறீர்கள்.. அது அப்படியே இருக்கட்டுமே” என்று கேட்ட ஒரு மருத்துவரை ஜேமி அடிக்கவே போய்விட்டார். ஒருவழியாக, அமெரிக்காவைச் சேர்ந்த லிட்டில் பேபி ஃபேஸ் என்ற அறக்கட்டளை கோல்பியின் அறுவை சிகிச்சைக்கன செலவை ஏற்றுக் கொள்ள முன்வந்தது.
விரைவில் தங்கள் குழந்தையின் முகத்தைக் கட்டியில்லாமல் பார்க்கப் போகிறோம் என்று மகிழ்ச்சியடைந்த இருவரும் இங்கிலாந்தின் பிரிஸ்டால் யுனிவர்சிடி மருத்துவமனையை தொடர்பு கொண்ட போது, அவர்கள் தற்போது இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடியாதென்றும் அவன் வளர்ந்த பிறகே செய்ய முடியுமென்றும் கூறி சிகிச்சை செய்ய மறுத்து விட்டனர்.
மனம் தளராமல் தங்களின் வாழ்நாள் சேமிப்பான, 10000 பவுண்டினை வைத்து அமெரிக்கா வந்த தம்பதியினர் கோல்பியை லியோனக்ஸ் ஹில் மருத்துவமனையில் அனுமதித்தனர். அறக்கட்டளையின் உதவியுடன் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த அறுவை சிகிச்சையில் அந்த கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டு விட்டது. வாழ்நாளில் இதை விட மகிழ்ச்சியான தருணம் கிடையாது என்கின்றனர் கோல்பியின் பெற்றோர்.