பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவர ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகள் தீர்மானம் எடுத்துள்ளன.
எனினும் இப்போதைக்கு அந்த திட்டம் இல்லையென முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். காலம் கடந்தும் மக்களின் ஆதரவில்லா அரசு அமையுமாயின் எதிர்த்து செயற்படுவோம் எனவும் அவர் குறிப்பிட்டார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நடைபெற்று முடிந்த தேர்தலில் மக்களின் ஆதரவும் தெரிவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கே கிடைத்தது. ஆனால் மக்களின் ஆதரவினை பெறாத ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினை அமைத்துள்ளதுடன்,ரணில் விக்கிரமசிங்க மக்களின் ஆணையின்றி பிரதமராகியுள்ளார்.
இது முற்றிலும் பாராளுமன்ற விதிமுறைகளுக்கு முரணானது மட்டுமன்றி மக்களின் நம்பிக்கைகளையும் வாக்குகளையும் ஏமாற்றும் செயலாகும். தேசிய அரசாங்கத்தின் தலைவர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர் ஆவார்.
நாம் அரசாங்கத்தில் இல்லை.தேர்தலில் மக்களின் ஆதரவு இல்லாத அதேபோல் தேர்தலில் போட்டியிடாத கட்சி இன்று பாராளுமன்றத்தின் ஆதிக்கத்தை தன்வசப்படுத்தியுள்ளது. எனவே இச்செயற்பாடுகளை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
அதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா பிரேரணையினை கொண்டுவரும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. ஆனால் இல்லையென்று நான் கூறவும் இல்லை. தேவையான சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தை கவுக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்போம் என குறிப்பிட்டார்.
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளிகளும் இடதுசாரிகளுமான வாசுதேவ நாணயக்கார, தினேஷ்குணவர்த்தன, விமல் வீரவன்ச ஆகியோரின் முன்னிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மேலும் சில உறுப்பினர்களும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றினை கொண்டுவரும் திட்டம் உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன