வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்கள் காணி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்!!

468

வவுனியா, சிதம்பரபுரம் நலன்புரிநிலைய மக்கள் தமக்கு குடியிருப்பதற்கு காணி வழங்கக் கோரி வவுனியா மாவட்ட செயலகம் முன்னால் இன்று(08.04) புதன்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த கால யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த தம்மை தங்க வைப்பதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட சிதம்பரபுரம் நலன்புரிநிலையமே கடந்த 20 வருடங்களுக்கு மேலாக எமது வாழிடமாகவுள்ளது. கொட்டும் மழையிலும் கொளுத்தும் வெயிலிலும் தினம் தினம் போராடியே நாம் வாழ்கின்றோம்.

எமக்கு அப் பகுதியில் உள்ள காணிகளை வழங்குவதாக பல தடவைகள் அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளால் வாக்குறுதி வழங்கினர். ஆனால் நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றோம். எமக்கு விடிவு கிடைக்கும் என ஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்தோம். ஆனால் இன்று வரை கதை சொல்கிறார்களே தவிர எமக்கு தீர்வைத் தரவில்லை.

எனவே, எமக்கு காணி வழங்க உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரி அந்த மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா பிரதேச செயலகம் முன்பாக ஒன்று கூடிய மக்கள் அதன் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் அங்கிருந்து ஊர்வலமாக மாவட்ட செயலகம் சென்று அரச அதிபரை சந்திக்க முற்பட்டனர். எனினும் பொலிஸார் அனுமதி வழங்காமையால் மாவட்ட செயலகம் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சார்பாக ஐவரை வவுனியா மாவட்ட அரச அதிபரை சந்தித்து அவர்கள் பிரச்தினைகளை தெரியப்படுத்த பொலிஸார் அனுமதித்தனர்.

21