விதிகளை பின்பற்றி தூஸ்ரா வீசலாம் : முரளிதரன்!!

407

Murali

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என இலங்கையின் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன்..

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சூழ்நிலையை பொறுத்து எப்படி பந்து வீச வேண்டும் என பந்து வீச்சாளர்களுக்கு அறிவுரை வழங்குவதே எனது பணி.

சன் ரைசர்ஸ் அணியில் அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அதனால் நான் இதுவரை கற்றுக் கொண்டதில் இருந்து ஒரு சில அறிவுரைகளை மட்டும் வீரர்களுக்கு அளித்தால் போதும் என்று நினைக்கிறேன்.

அணியில் உள்ள லெக் ஸ்பின்னர் கரண் சர்மா மற்றும் ஓப் ஸ்பின்னர் பர்வீஸ் ரசூல் இருவரும் சிறந்த பந்துவீச்சாளர்கள்.

இருவருக்கும் ஒரு நாள் போட்டிக்கான அணிகளில் விளையாட போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்களுக்கு இங்கே நல்ல வாய்ப்பு உள்ளது.

இளம் வீரர்களுக்கு ஐபிஎல் தொடர் மிகச்சிறந்த அடித்தளமாக உள்ளது. இந்திய உள்நாட்டு வீரர்கள் சர்வதேச தொடர்களில் சாதிக்க இது உதவும். விளையாடும் வாய்ப்பை இழந்தது எனக்கு எப்போதும் வருத்தம்தான்.

சென்ற வருடம் வரை நான் விளையாடினேன். ஆனால் இனி விளையாடுவது சரியாக இருக்காது. விளையாடுவதில் இருந்து பயிற்சியளிப்பது என்பது முற்றிலும் மாறுபட்டது.

வீரர்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு உதவி செய்யலாம். ஆனால் இறுதியில் எல்லாமே வீரர்களின் கையில் தான் உள்ளது. அவர்களை கட்டாயப்படுத்த முடியாது.

1990 மற்றும் 2000ம் ஆண்டுகளை போல் அல்லாமல் தற்போது கிரிக்கெட்டில் விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பந்துவீச்சாளர்கள் அதற்கு ஏற்ப தங்களை தயார் செய்து கொண்டு பந்து வீச வேண்டும். தூஸ்ரா வகை பந்து வீச்சுக்கும் கூட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் சில விதிமுறைகள் உள்ளன.

பந்து வீசும் போது முழங்கையை 15 பாகைக்கு மேல் வளைத்து பந்து வீச கூடாது என்ற விதி உள்ளது. ஒரு பந்துவீச்சாளர் தூஸ்ரா வீசக்கூடாது என்று எந்த விதிமுறையும் கிடையாது. அதனால் பந்துவீச்சாளர்கள் தங்கள் எல்லைகளுக்கு உட்பட்டு, விதிமுறைகளை பின்பற்றி பந்து வீச வேண்டும்.

ஆனால் விக்கெட் விழுவதை விட ரன்கள் குவிக்கப்படுவதையே ரசிகர்கள் விரும்புகின்றனர். கிறிஸ் கெய்ல், டிவில்லியர்ஸ் போன்ற அதிரடி வீரர்கள் பந்துகளை அடித்து நொறுக்குவதை ரசிகர்கள் விரும்புகின்றனர்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுவதை ரசிகர்கள் விரும்புவதில்லை. இது துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமானது என முரளிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.