கல்யாண் ஜூவல்லர்ஸ் நகை கடை திறப்பு விழாவில் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராயை பார்க்க திரண்ட கூட்டம்!!(படங்கள்)

547

சென்னை தியாகராய நகரில் 200 கோடி முதலீட்டில் கல்யாண் ஜூவல்லர்ஸ் புதிய நகை கடை அமைக்கப்பட்டுள்ளது. 40 ஆயிரம் சதுர அடியில் இந்த நகை கடை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா இன்று பகல் 12.05 மணிக்கு நடைபெற்றது.

இதில் இந்தி நடிகர் அமிதாப்பச்சன், நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, கன்னட நடிகர் சிவ்ராஜ்குமார், நடிகைகள் ஐஸ்வர்யாராய், மஞ்சுவாரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகர்கள் அனைவரும் பட்டுவேட்டி, சட்டையில் பங்கேற்றனர். அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட நட்சத்திரங்களை காண கல்யாண் ஜூவல்லர்ஸ் அமைந்துள்ள தியாகராய சாலையில் கூட்டம் அலை மோதியது. ஆண், பெண் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு நின்றனர்.

கூட்டத்தை கட்டுப்படுத்த ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டு இருந்தனர். சவுக்கு கட்டைகள் மூலம் தடுப்பு வேலிகளும் அமைத்து இருந்தனர். நடிகர்கள் காரில் வந்து இறங்கியதும் அவர்களை காண கூட்டத்தினர் முண்டியடித்தனர். அமிதாப்பச்சனையும், ஐஸ்வர்யாராயையும் பார்த்து கையசைத்து குரல் எழுப்பினார்கள். அவர்களும் பதிலுக்கு கையசைத்தனர். பின்னர் அவர்கள் கல்யாண் ஜூவல்லர்ஸ் நகை கடையை திறந்து வைத்தனர். நகைகள் ஷோரூமையும் சுற்றி பார்த்தனர். நகைகடை முன்னால் மேடை அமைக்கப்பட்டு இருந்தது.

அதில் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், பிரபு, நாகார்ஜுனா உள்ளிட்டோர் ஏறி நின்று திரண்டிருந்த கூட்டத்தினரை பார்த்து கையசைத்தனர். ஐஸ்வர்யா பேசும் போது, ‘‘சென்னை எனக்கு பிடித்த நகரம். இங்கு ரசிகர்களை சந்திப்பதில் சந்தோஷப்படுகிறேன். எல்லோரும் கல்யாண் ஜூவல்லர்சில் நகை வாங்குங்கள்’’ என்றார்.

பிரபு பேசும்போது, ‘ஐஸ்வர்யாராய் எங்கள் வீட்டு மருமகள். எனது தந்தை சிவாஜியை, அமிதாப்பச்சன் அண்ணன் என்றுதான் அழைப்பார். எனவேதான் அவர் எங்கள் விட்டு மருமகளாக இருக்கிறார்’ என்றார். கூட்டம் அலை மோதியதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பனகல் பார்க், பாண்டி பஜார், போக்ரோடு, தேனாம்பேட்டை சிக்னல் போன்ற பகுதிகள் கூட்ட நெரிசலால் ஸ்தம்பித்தது.

அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட நடிகர்கள் சிறிது நேரம் நகை கடையை சுற்றி பார்த்து விட்டு புறப்பட்டு சென்றனர். கல்யாண் ஜூவல்லர்ஸ் தலைவரும், மேலாண்மை இயக்குனருமான டி.எஸ்.கல்யாண் ராமன், நிர்வாக இயக்குனர்கள் ராஜேஷ் கல்யாண ராமன், ரமேஷ் கல்யாண ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கல்யாண் ஜூவல்லர்ஸ்க்கு 65 கிளைகள் உள்ளன. மேற்கு ஆசியாவில் 12 கிளைகளும், ஐக்கிய அரபு குடியரசில் 9 கிளைகளும், குவைத்தில் 3 கிளைகளும் இருக்கின்றன. சென்னை கிளையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய மற்றும் நவீன வடிவங்களை கொண்ட நகைகள் கிடைக்கும். ஒரே நேரத்தில் 500 வாடிக்கையாளர்களை கையாளும் விதத்தில் இந்த கிளை வடிவமைக்ப்பட்டு உள்ளது. 200 கார்கள், 300 இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக வாகன நிறுத்துமிடமும் அமைக்கப்பட்டு உள்ளது.

1 2 3 5 6