லாரல் ஹார்டி, மிஸ்டர் பீன் இவர்களுக்கெல்லாம் இணையான காமெடி ஒன்றை பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் போலார்ட் அரங்கேற்றியுள்ளார்.
நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 16வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 209 ஓட்டங்கள் குவித்ததையடுத்து 210 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் பெங்களூர் ரோயல் சேலஞ்ஜர்ஸ் அணி களமிறங்கியது.
ஆட்டத்தின் 3வது ஓவரின் போது கிறிஸ் கெயிலுக்கு அருகில் கடமையே கண்ணாக களத்தடுப்பு செய்து கொண்டிருந்த போலார்டை அழைத்த நடுவர், ஸ்லெட்ஜிங்கில் (வாக்கு வாதத்தில்) ஈடுபடக்கூடாதென்று எச்சரிக்கை விடுத்தார்.
“நான்தான் ஒன்றுமே செய்யவில்லை” என்ற போலார்டிடம் “இது வெறும் எச்சரிக்கை.. தான்” என்று சொல்லிவிட்டு நடுவர் போய்விட்டார்.
நடுவரின் இந்த திடீர் எச்சரிக்கையால் கடுப்பான போலார்ட், ஓவர் இடைவேளையின் போது, ஓடிப்போய் ஒரு செலோடேப்பை வாயில் ஒட்டிக்கொண்டு மைதானத்துக்குள் வந்தார். பவுண்டரி எல்லையில் இருந்த ரிக்கி பொண்டிங் உட்பட மும்பை அணி வீரர்கள் அனைவரும் போலார்டின் இந்த நடவடிக்கையை பார்த்து சிரித்தனர்.
மைதானத்தில் உள்ள பிரம்மாண்டமான திரையிலும் போலார்டின் செலோடேப் ஒட்டிய முகம் தெரியவே, ரசிகர்களின் சிரிப்புச்சத்தம் விண்ணை முட்டியது. கடைசியில், அதே திரையில் ’சைலன்ஸ் ப்ளீஸ்’ என்று காட்டிய பிறகுதான் ரசிகர்களின் சிரிப்புச்சத்தம் கொஞ்சம் அடங்கியது.








