பதுளை மாவட்டத்தில் 412 இடங்களில் மண்சரிவு ஏற்படும் பகுதிகளாக அடையாளப் படுத்தப்பட்டிருப்பதாக பதுளை மாவட்ட பிரதேச செயலாளர் நிமால் அபேசிங்க தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
பதுளை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை நூறு மில்லி மீற்றருக்கு மேல் காணப்படும் பட்சத்தில் பாரிய மண் சரிவு ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருந்து வருகின்றன.
இத்தகைய அனர்த்தங்கள் ஏற்படும் அபாயம் இருக்கும் இடங்களிலிருந்து மக்களை இடம் பெயர வைக்கவும் ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கின்றோம்.
பதுளை மாவட்டத்தின் தாழ் நிலப்பிரதேசங்களிலும் ஆறுகள், நீரோடைகளை அண்டி வாழும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போது பெய்து வரும் பெரும்மழையினையடுத்து ஹல்துமுல்ல பகுதியின் நிக்கபொத்த இறப்பர் தோட்ட மொன்றில் ஐந்து ஏக்கர் நிலபரப்பு மண்சரிவிற்குள்ளாகியுள்ளது.
இம்மண் சரிவினையடுத்து மூன்று வீடுகளில் வசித்து வந்த பன்னிரண்டு பேர் அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் பாதுகாப்பான இடமொன்றில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும் எல்ல- லெப்னவாயா பிரதான பாதையில் கற்பாறைகள் சரிந்த வண்ணமிருப்பதால் அப்பதையை பாவிப்பவர்கள் மாற்றுப்பாதைகளை பாவிக்கும் படி எல்ல பொலிஸார் வாகன சாரதிகளைக் கேட்டுள்ளனர்.






