எகிப்திய நீதிமன்றமொன்று அந்நாட்டு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்ஸிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அவர் அதிகாரத்திலிருந்த போது ஆர்ப்பாட்டக்காரர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலேயே அவருக்கு மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதையடுத்து வழங்கப்பட்ட முதலாவது நீதிமன்ற தீர்ப்பாக இது உள்ளது.
அவர் மேலும் பல விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார்.
முர்ஸி அவருக்கு எதிராக இடம்பெற்ற பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டில் இராணுவத்தால் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து அவரது முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டதுடன் அந்த அமைப்பைச் சேர்ந்த பலர் கைதுசெய்யப்பட்டனர்.
2012 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே இடம்பெற்ற மோதல்களின் போது ஊடகவியலாளர் ஒருவரையும் ஏனைய எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்ளையும் கொல்வதற்கு ஆதரவாளர்களைத் தூண்டியதாக முர்ஸி மீதும் ஏனைய முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின தலைவர்கள் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.






