பிரதான கட்சிகளி்ன் மேதினக் கூட்டங்கள் கொழும்பில்!!

540

MAY DAY 1

பிரதான அரசியல் கட்சிகள் தமது மே தினக்கூட்டங்களை கொழும்பில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றன. அத்துடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பு திருகோணமலையில் மே தினக்கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை இரண்டாகப் பிரிந்து மே தினக்கூட்டங்களை கொழும்பில் நடத்தவுள்ளமை விசேட அம்சமாகும். 11 வருடங்களுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உருவாக்கப்பட்டதிலிருந்து இம்முறையே இரண்டாகப் பிரிந்து மேதினக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.

சுதந்திரக் கட்சி

சிறிலங்கா சுதந்திரக்கட்சி இம்முறை மே தினக்கூட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு ஹைட்பாக் மைதானத்தில் நடத்தவுள்ளது. கொழும்பில் மூன்று பகுதிகளிலிருந்து ஊர்வலமாக வரவுள்ள சுதந்திரக்கட்சி ஆதரவாளர்கள் இரண்டு மணியளவில் ஹைட்பார்க் மைதானத்தை வந்தடைவர்.

அதன் பின் ஜனாதிபதி மைத்திரிபால சிறினே தலைமையில் பிரதான கூட்டம் நடைபெறும். சுதந்திரக்கட்சி ஆதரவாளர்கள் மருதானை மண்டப சந்தி, விகாரமாஹேதவி பூங்கா, புருக்பொன்ட் சந்தி, ஆகிய இடங்களிலிருந்து ஊர்வலமாக ஹைட்பார்க் மைதானத்திற்கு வரவுள்ளனர்.

மஹிந்த ஆதரவு கூட்டம்

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கட்சியின் பங்காளிக்கட்சிகள் கிருலப்பனையிலுள்ள அத்துலத்முதலி மைதானத்தில் மே தினக்கூட்டத்தை நடத்தவுள்ளன.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மஹிந்தராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதிலும், அவர் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என்றும், பதிலாக வாழ்த்து செய்தியொன்றை அனுப்பிவைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, உள்ளிட்ட சில கட்சிகள் மஹிந்த ஆதரவு மேதினக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சி

இது இவ்வாறிருக்க ஐக்கிய தேசியக்கட்சியின் மேதினக்கூட்டம் பொரளை கெம்பல் பாக் மைதானத்தில் நடைபெறவுள்ளது. கட்சியின் தொழிற்சங்கமான தேசிய ஊழியர் சங்கம், இளைஞர் மற்றும் மகளிர் அமைப்புக்கள் இணைந்து இந்த மே தினக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன. இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டு பிரதான உரையை நிகழ்த்தவுள்ளார்.

” எமது மேதினக்கூட்டத்திற்கு அரச பஸ்வண்டிகள் பயன்படுத்தமாட்டாது, மாறாக தனியார் பஸ்வண்டிகளை கொண்டு எமது ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வருகை தருவார்கள்” என்று ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி.

மக்கள் விடுதலை முன்னணியின் மேதினம் கூட்டம் கொழும்பு பி.ஆர்.சி. மைதானத்தில் இடம் பெறவுள்ளது. தெஹிவளை, .மஹிந்த வித்தியாலயத்திலிருந்து மக்கள் விடுதலையின் முன்னணியின் ஆதரவாளர்கள் பி.ஆர்.சி. மைதானத்திற்கு ஊர்வலமாக வருகை தருவார்கள்.

கூட்டமைப்பு

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மே தினக்கூட்டம் இரா. சம்பந்தன் தலைமையில் வடக்கு கிழக்கை உள்ளடக்கியதாக நடைபெறும் பிரதான கூட்டம் இம்முறை திருகோணமலையில் நடைபெறும்.

ஜனநாயக மக்கள் முன்னணி

மேலும் ஜனநாயக மக்கள் முன்னணியின் மேதினக்கூட்டம் அதன் தலைவர் மனோகணேசன் தலைமையில் கொழும்பு ஜப்பாட்டாவீதியில் நடைபெறும். இந்தக்கட்சியின் பிரதான கருப்பொருளாக அதிகாரப் பரவலாக்கல் மற்றும் தேசிய ஒற்றுமை என்பன முன்வைக்கப்படும்.

நவசமசமாஜக்கட்சியின் மே தினக்கூட்டம் அதன் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ணவின் தலைமையில் கூட்டம் கொழும்பு குணசிங்கபுர பஸ்நிலைய வளாகத்தில் நடைபெறும்.

மேலும் மலையக அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் மேதினக் கூட்டங்களை நடத்தவுள்ளன.