பாகிஸ்தானிய கல்வி செயற்பாட்டாளர் மலாலா யூஸப்ஸாயி மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புபட்ட 10 பேருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.
மலாலா 2012 ஆம் ஆண்டு 15 வயதுச் சிறுமியாக இருந்த போது, சுவாட் பள்ளத்தாக்கில் பாடசாலை பஸ்ஸில் வைத்து அவரது தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டது.
இந்த சம்பவம் முழு உலகையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.
தனது உயிருக்குள்ள அபாயத்தைப் பொருட்படுத்தாது சிறுவர்கள் உரிமைகளுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டமைக்காக அவருக்கு கடந்த வருடம் சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் பாகிஸ்தானிய தலிபான் தீவிரவாத குழுவைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர் உள்ளடங்குகிறார். இந்தத் தாக்குதலுக்கு உள்ளூர் தலிபான் தலைவரான முல்லாஹ் பஸ் லுல்லாவே உத்தரவிட்டிருந்ததாக பாகிஸ்தா னிய அதிகாரிகள் நம்புகின்றனர்.
மேற்படி தாக்குதலையடுத்து பிரித்தானியா வில் சிகிச்சை பெற்ற மலாலா (தற்போது 17 வயது) பர்மிங்ஹாமில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தலிபான்களின் கொலை அச்சுறுத்தல் காரணமாக அவர் தாய்நாடு திரும்பமுடியாத நிலையில் உள்ளார்.





