334 உள்ளுராட்சி மன்றங்கள் கலைக்கப்படவுள்ளன!!

583

Maithripala_Sirisena

நாட்டில் காணப்படுகின்ற 334 உள்ளுராட்சி மன்றங்கள் கலைக்கப்படவுள்ளதாகத் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சிமன்றங்களை கலைத்து முதலில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விரைவில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதற்கு முன்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 15ம் திகதி சகல உள்ளுராட்சி மன்றங்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைப்பார் என அமைச்சரவை பேச்சாளர் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

நாட்டில் தற்போது 271 பிரதேச சபைகளும், 41 நகரசபைகளும், 23 மாநகரசபைகளும் இயங்கி வருகின்றன. இவற்றில் பலவற்றினது பதவிக் காலம் கடந்த ஒக்ரோபர் மாதத்துடன் நிறைவடைந்துள்ளது.

உள்ளுராட்சிமன்றங்களை கலைத்தல் அல்லது பதவிக் காலத்தை நீடித்தல் ஆகிய அதிகாரங்கள் உள்ளுராட்சிமன்ற அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிமன்றங்களின் பதவிக்காலம் அண்மையில் மேலும் மூன்று மாத காலத்துக்கு நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.