வவுனியா ஊடகவியலாளரை கண்டித்த பிரதேச செயலாளருக்கு ஊடகவியலாளர் சங்கம் கண்டனம்!!

567

media

வவுனியா ஊடகவியலாளர் ஓருவரை பிரதேச செயலக வளாகத்தில் வைத்து கண்டித்ததுடன் ஏனைய பிராந்திய ஊடகவியலாளர்களை அவமானப்படுத்தும் வகையில் பேசிய வவுனியா பிரதேச செயலாளரின் செயலை வன்மையாக கண்டிப்பதாக வவுனியா மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ் விடயம் தொடர்பாக ஊடகவியலாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா பேயாடிகூழாங்குளத்தில் காணியொன்றை திருமறைக்கலாமன்றத்திற்கு பிரதேச செயலாளர் வழங்கிமை தொடர்பாக இக் கிராம மக்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.

இவ் ஆர்ப்பாட்டத்தின் செய்தியை வவுனியா ஊடகவியலாளர்கள் சேகரித்து ஊடகங்களுக்கு வழங்கியிருந்தனர்.

இந் நிலையில் அச் செய்தியை வெளியிட்டமை மற்றும் ஆர்ப்பாட்டத்தில் குறிப்பிட்ட சிலரே பங்கேற்ற நிலையில் அதனை ஊடகவியலாளர்களே பெரிய விடயமாக்கியதாக தெரிவித்து தனிப்பட்ட விடயமாக பிரதேச செயலகத்திற்கு சென்ற ஊடகவியலாளரை பிரதேச செயலாளர் தரக்குறைவாக பேசியுள்ளார்.

எனினும் இந்த ஆர்ப்பாட்டம் மக்களால் நடத்தப்பட்டதன் அடிப்படையிலும் மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்தியதன் அடிப்படையிலும் அச் செய்தியை ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை உள்ளடக்கி வெளியிடப்பட்டிருந்தது.

இச் செய்தியின் மூலமாக ஊடகவியலாளர்கள் எவருக்கும் பக்கச்சார்பாகவோ ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை மாற்றியோ எவரையும் வஞ்சிக்கும் நோக்குடனோ செய்தியை வெளியிடவில்லை. ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்தியை முழுமையாக வெளியிட்டிருந்தனர்.

எனினும் ஊடகவியலாளர்களின் பணியை அவதூறாகவும் ஊடகவியலாளர்களை தரக்குறைவாகவும் மக்கள் எண்ணும் பலர் முன்னிலையில் தரக்குறைவாக பொறுப்பு வாய்ந்த அதிகாரியான பிரதேச செயலளார் பேசியமையை வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-IBC தமிழ்-