சொத்துக் குவிப்பு வழக்கு ஜெயலலிதா விடுதலை- நீதிபதி குமாரசாமி அதிரடி தீர்ப்பு!

1170

11-1431324994-kumarasamy-jayalalitha735-600

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பை அண்ணா திமுகவினர் உற்சாகமாக வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. கடந்த 18 ஆண்டுகாலம் நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ஜெயலலலிதாவுக்கு ரூ100 கோடி அபராதமும் விதித்து நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார். சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு தலா ரூ10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக் கோரியும் ஜெயலலிதா உள்ளிட்டோர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர்.

இம்மனுவை 41 நாட்கள் விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி இன்று தீர்ப்பளிப்பதாக அறிவித்திருந்தார். ஜெயலலிதாவின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் இத்தீர்ப்புக்காக நாடே பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தது. இத்தீர்ப்பு வழங்குவதற்காக காலை 10 மணிக்கே கர்நாடகா உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி குமாரசாமி வருகை வந்தார்.



பின்னர் அவர் தமது அறை எண் 14-க்கு சென்றார். முற்பகல் 11 மணிக்கு தமது இருக்கையில் அமர்ந்த நீதிபதி குமாரசாமி, மேல்முறையீட்டு வழக்கின் வரிசை எண்களை வாசித்துவிட்டு, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை ஏற்பதாக முதலில் கூறினார். பின்னர் 4 பேரும் மேல்முறையீட்டு மனுவில் முன் வைத்த கோரிக்கையான கீழ் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்; அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்பதாகவும் நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்தார். அதிகபட்சம் 3 நிமிடங்களிலேயே தமது தீர்ப்பை வாசித்து முடித்தார் நீதிபதி குமாரசாமி. இதனடிப்படையில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அப்போது நீதிமன்றத்தில் இருந்த ஜெயலலிதா உள்ளிட்டோர் தரப்பு வழக்கறிஞர் நீதிபதி குமாரசாமியை பார்த்து கை கூப்பி நன்றி தெரிவித்தனர். கர்நாடகா உயர்நீதிமன்ற தனி நீதிபதி குமாரசாமியின் இந்த உத்தரவை வரவேற்று அண்ணா தி.மு.க.வினர் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.