44 வருட காலமாக தனது மூக்கில் இறப்பராலான விளையாட்டுப் பொருளின் ஒரு பகுதி சிக்கியிருப்பதை அறியாது நபரொருவர் வாழ்ந்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
கம்பெர்லி பிராந்தியத்தில் வசிக்கும் ஸ்டீவ் ஈஸ்டன் என்ற நபரே இவ்வாறு விளையாட்டுப் பொருளின் ஒரு பகுதி மூக்கில் பல வருட காலமாக சிக்கிய நிலையில் வாழ்ந்துள்ளார்.
அவர் 1970 களில் 7 வயது சிறுவனாக இருந்த போது விளையாட்டுத் துப்பாக்கியால் சுடுவதற்கு பயன்படும் இறப்பராலான அந்த பொருளை கையில் எடுத்து விளையாடிய போது, அது அவரது மூக்கினுள் தவறுதலாக உறிஞ்சப்பட்டுள்ளது.
இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஸ்டீவின் நாசித் துவாரத்தில் ஊடுருவியிருந்த அந்த இறப்பர் விளையாட்டுப் பொருளின் தண்டு வடிவமான பகுதி மருத்துவர்களால் அகற்றப்பட்டிருந்தது.
ஆனால் அதன் எஞ்சிய வட்டமான பகுதி அவரது நாசித் துவாரத்தில் தொடர்ந்து இருப்பதை மருத்துவர்கள் அறியவில்லை.
இந்நிலையில் பல வருடங்களாக மூக்கடைப்பால் துன்பப்பட்டு வந்த அவர், தனக்கு சளியால் மூக்கு அடைத்துள்ளதாகவே கருதி வந்துள்ளார்.
ஆனால் அண்மையில் அவர் தும்மிய போது அந்த இறப்பராலான விளையாட்டுப் பொருளின் எஞ்சிய பகுதி வெளியேறியதையடுத்தே தான் இத்தனை வருட காலமாக அநாவசியமாக துன்பப்பட்டு வந்துள்ளதை அவர் அறிந்துள்ளார்.