
கோடை வெயில் கடுமையாக கொளுத்தி வரும் நிலையில் ஆந்திர பிரதேசத்தில் மேலும் 41 பேர் பலியானதையடுத்து இந்தியா முழுவதும் வெயிலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2248 ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் நாள்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகி வருகின்றனர். பகலில் மக்கள் வெளியே தலைகாட்ட முடியாததால் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் ஏராளமான நோயாளிகள் வெப்பம் காரணமாக புழுக்கத்தால் உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு பலியாகிறார்கள்.
பகல் நேரங்களில் மக்கள் வெளியில் வரவேண்டாம் என்று மாநில அரசுகள் எச்சரிக்கை விடும் அளவுக்கு ஆந்திரா, தெலுங்கானாவில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது.
மே மாதம் இறுதியில் வெயில் கொடுமை குறையும் என எதிர்பார்ப்பதாக வானிலை தெரிவித்தது. ஆனாலும் வட மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 41 பேர் பலியானதையடுத்து ஆந்திர பிரதேசத்தில் வெயிலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,677 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல் ஒடிசா, குஜராத், ராஜஸ்தான், மற்றும் டெல்லியிலும் பலர் வெயிலின் கொடுமைக்கு பலியாகியுள்ளனர். இதையடுத்து நாடு முழுவதும் கோடை வெயிலின் உக்கிரத்திற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2248 ஆக உயர்ந்துள்ளது.





