வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
இந்தப் பொங்கல் உற்சவத்தில் பங்கேற்பதற்காகவும், தமது நேர்த்திகளை நிறைவு செய்வதற்காகவும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வற்றாப்பளையை நோக்கி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று காலை முதலே அங்கு வருகை தந்தவண்ணமுள்ளனர்.
காவடிகள், பாற்செம்புகள், கற்பூரச் சட்டிகள் என்பன எடுத்து அடியார்கள் தமது நேர்த்திகளை நிறைவேற்றுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
வற்றாப்பளை அம்மன் கோயிலுக்கான விசேட பஸ்சேவைகளை இ.போ.ச. மற்றும் தனியார் பஸ்களும் நடத்திவருகின்றன. ஆலயச் சூழலில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.