பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் 1½ லட்சம் பேர் பலி!!

309

Pak

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் சண்டையில் 1½ லட்சம் பேர் பலியாகி உள்ளதாக புதிய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் தீவிரவாதம் குறித்தும், அதனால் நடைபெறும் சண்டையில் பலியானோர் குறித்தும் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக் கழகத்தின் வாட்சன் சர்வதேச கல்வி நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது.

அமெரிக்காவில் அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பின்னர் கடந்த 2001ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. தலிபான் தீவிரவாதிகளுடன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் சண்டையில் ஈடுபட்டன.

அதில் பலர் உயிரிழந்தனர். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். இந்த நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் படைகளை படிப்படியாக வாபஸ் பெறுவதாக அமெரிக்கா அறிவித்தது. இருந்தும் ஆப்கானிஸ்தானில் சண்டை இன்னும் முடியவில்லை. தொடர் கதையாகவே உள்ளது.

பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் புகலிடமாகவும், சொர்க்கமாகவும் திகழ்கிறது. வடமேற்கு பாகிஸ்தானில் தலிபான்கள், அல்கொய்தா உள்ளிட்ட தீவிரவாதகிளின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. வெடிகுண்டு தாக்குதல், ராணுவத்துடன் சண்டை என அங்கு வன்முறை தினமும் ஒரு வாடிக்கையாகி விட்டது.

வன்முறைச் சம்பவங்களால் ராணுவ வீரர்கள், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள், உதவியாளர்கள் மற்றும் நேட்டோ படை வீரர்கள், வெளிநாட்டு உதவி குழுக்களை சேர்ந்தவர்கள் என பலர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுடனான சண்டையில் கடந்த 2001ம் ஆண்டு முதல் இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் பொதுமக்களும், ராணுவ வீரர்களும் அடங்குவர்.

இவர்கள் தவிர 1 லட்சத்து 62 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.