ஹீரோக்களை முடிவு செய்யும் சந்தானம்!

648

santhanam

தற்போது வெளியாகக் கூடிய பாதிக்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் சந்தானம் இருக்கிறார். அவர் இருந்தால்தான் படம் ஓடுகிறது என்ற தயாரிப்பாளரும், இயக்குநரும் நினைக்கிறார்கள்.

இதனால் சந்தானத்தின் கால்ஷீட் டயரி நிரம்பி வழிகிறது. ஒருநாளைக்கு 10 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கி வந்தவர் “25 நாட்கள் கால்ஷீட், 5 கோடி ரூபாய் சம்பளம், படம் முழுக்க வரவேண்டும் என அதிரடி வேட்டையைத் தொடங்கி உள்ளார்.

இருந்தாலும் சந்தானத்தின் கால்ஷீட்டுக்காகத் தவம் கிடக்கும் தயாரிப்பாளர்கள் ஏராளம். படத்தின் ஹீரோவை முடிவு செய்வதற்கு முன்பு சந்தானத்திடம் கால்ஷீட் வாங்கி விடுகிறார்கள்.

கால்ஷீட் வாங்கும்போது படத்தின் கதையைச் சொல்ல வேண்டுமல்லவா? அப்படி படத்தின் கதையைக் கேட்கும் சந்தானம், இந்தக் கதையில் அந்த ஹீரோ நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்கிறாராம்.

இப்படித்தான் “மிர்ச்சி” சிவா – தன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள “யா யா” படத்துக்கு சந்தானத்திடம் கதை சொன்னார் ராஜசேகரன். இந்தப் படத்தில் யார் ஹீரோ என சந்தானம் கேட்க, சிவகார்த்திகேயனை கேட்கலாம் என நினைத்திருக்கிறேன் என்றிருக்கிறார் ராஜசேகரன். அவரை விட “மிர்ச்சி” சிவா இந்தக் கதைக்கு பொருத்தமா இருப்பார் என சந்தானம் சொல்ல, இப்போது அந்தப் படத்தில் “மிர்ச்சி” சிவா தான் ஹீரோ.

இப்படி விஷால், சிம்பு என இன்றைய முன்னணி இளம் ஹீரோக்களுக்கான கதையை முடிவு செய்வது சந்தானம் தானாம்.

குறிப்பாக, ஒன்றிரண்டு படம் இயக்கியவர்களும், புதிதாக இயக்க வருபவர்களும் சந்தானம் சொல்வதைத்தான் வேதவாக்காக எடுத்துக் கொள்கிறார்களாம்.