லிங்குசாமி மீது சீமான் அளித்த புகாரால் சூர்யா கடுப்பு!!

405

surya1

இயக்குனரும், தயாரிப்பாளருமான லிங்குசாமி மீது இயக்குனர் சீமான் இயக்குனர் சங்கத்தில் அளித்த புகார் காரணமாக நடிகர் சூர்யா கடும் கடுப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கௌதம்மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த “துருவ நட்சத்திரம்” படம் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் திடீரென நிறுத்தப்பட்டது. “துருவ நட்சத்திரம்” பட கதையில் திருப்தி இல்லாததால் கதையை மாற்றச் சொல்லி சூர்யா நிபந்தனை போட்டதால் படப்பிடிப்பு நின்று போனது.

அந்த சூழலில் திருப்பதி பிரதர்ஸ் சார்பில் ஒரு கதை சொல்லி சூர்யாவிடம் ஓகே வாங்கியிருந்தார் இயக்குனர் லிங்குசாமி.
லிங்கு சொன்ன கதை பிடித்திருந்தால் “துருவ நட்சத்திரம்” படத்திற்கு தந்த கால்ஷீட் திகதிகளை லிங்குசாமி இயக்கப்போகும் படத்திற்கு கொடுத்தார் சூர்யா.

படப்பிடிப்பும் விரைவில் தொடங்க இருந்த நிலையில்தான் சிக்கல் ஆரம்பமானது..

பிரபல தயாரிப்பாளர் தாணு தனது நிறுவனம் சார்பில் நடிகரும், இயக்குனருமான சீமானிடம் ஒரு கதை கேட்டு படம் தயாரிக்க ஒப்புக் கொண்டிருந்தார். இந்த படத்திற்கு “பகலவன்” என பேரும் வைத்திருந்தார்கள். ஜெயம்ரவி நாயகனாக நடிக்கயிருந்தார். கதை விவாதம் முடிந்து படப்பிடிப்பு தொடங்கும் திகதியும் முடிவானது.

இந்த நிலையில்தான், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் கதையும் “பகலவன்” கதையும் ஒரே கதைதான் என்பது சீமானுக்கு தெரியவந்தது.

கடுப்பான சீமான் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் லிங்குசாமியின் மீது புகார் அளித்திருக்கிறார். இந்த விவரம் தெரிந்ததும் இருவரையும் சமாதானப்படுத்த செயலாளர் ஆர்.கே.செல்வமணியும் சில முக்கிய சங்க நிர்வாகிகளும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

புகார் விவரம் வெளியே தெரியாமல் தடுக்கவும் புகாரை மீளப் பெறவும் சீமானிடம் பிரபலங்கள் பலர் பேச்சு நடத்தியும் பலன் ஏற்படவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு லிங்குசாமி இயக்கத்தில் வெளியான “ஆனந்தம்” படமும், விக்ரமன் இயக்கத்தில் வெளியான “வானத்தைப்போல” படமும் ஒரே கதை என்றும், இதேபோல பிரச்சினை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.