சுவாமி சிலை அவமதிப்பு : இருவர் மீது பொலிசார் வழக்கு!!

914

11

புதுச்சேரி அருகே, சின்ன இருசம்பாளையம், முத்துமாரி அம்மன் கோவிலில், சுவாமி சிலையை அவமதித்ததாக, இருவர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இங்குள்ள கோவில் வளாகத்தில் அம்மன் சிலை மீது, ஒரு வாலிபர் காலை வைத்து நிற்பது போன்ற காட்சி, ‘வட்ஸ்அப்’பில் பரவியது. இதைப் பார்த்த இந்து முன்னணியினர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். அது பற்றி கண்டனங்களை தெரிவித்தனர்.

புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பம் அடுத்த, தமிழக பகுதியான சின்ன இருசாம்பாளையம் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் நடந்த நிகழ்வு எனத் தெரிய வந்துள்ளது.

சின்ன இருசாம்பாளையத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம், நிச்சயதார்த்த விழா நடத்துவதற்காக, அரியாங்குப்பம், கோட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்த சிவராஜிடம் கூறி, கோவில் வளாகத்தில் ஷாமியானா போட்டுள்ளனர்.

நிகழ்ச்சி முடிந்து ஷாமியானாவை அவிழ்த்த போது, சிவராஜ், அதே ஊரைச் சேர்ந்த வெங்கட் ஆகியோர், கோவில் கருவறை பின்புறத்தில், சுவரில் சிமென்ட் மூலம் அமைக்கப்பட்டுள்ள சிலை மீது காலை வைத்து அவிழ்த்து உள்ளனர். இதில், அந்த சிலையின் கை உடைந்துள்ளது.
இது குறித்து, கோவில் தர்மகர்த்தா நாராயணசாமி,பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.

மதவாதத்தை துாண்டுதல், பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்து, சிவராஜ், வெங்கட் ஆகியோரை, பொலிசார் தேடி வருகின்றனர்.