யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழப்பு!!(படங்கள்)

364

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை யானையின் தாக்குதலுக்குள்ளாகி நெல்லிக்காடு பகுதியை சேர்ந்த ச.இராஜதுரை (60) என்பவர் உயிரிழந்துள்ளார்.

இவர் வீட்டிலிருந்து இயற்கைக்கடன் கழிப்பதற்காக வெளியில் சென்ற போதே, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற கொக்கட்டிச்சோலை பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி ரி.காராளசிங்கம் ஆகியோர் மரண விசாரணை நடத்தினர்.

அத்துடன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னமும் சம்பவ இடத்துக்கு சென்று இது தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளையும் வழங்கினார்.

களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி அப்துல் ரியாழின் பணிப்புரையின் கீழ் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

கடந்த ஒரு வார காலத்தில் யானையின் தாக்குதல்கள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 40க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் வாழ்வாதார பயிர்ச்செய்கைகளும் அழிக்கப்பட்டுள்ளன.

இந்த யானை தாக்குதல்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் கடந்த அரசாங்க காலத்திலும் இன்றைய அரசாங்க காலத்திலும் பல்வேறு கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்ட போதிலும் இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையே இருந்து வருகின்றது.

11 12 13 14 15