பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வீசிய அனல் காற்றால் 200 பேருக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிகளவான மரணங்கள் கராச்சி நக ரில் இடம்பெற்றுள்ளன. அந்நகரில் 45 பாகை செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை நிலவு தாக கூறப்படுகிறது.
அளவுக்கதிகமான வெப்பம் காரணமாக மின்விசிறி மற்றும் குளிரூட்டிகளை இயக்க அதிகளவு மின்சாரம் உபயோகிக்கப்பட்டு வருவதால் மின் பற்றாக்குறையை ஈடுசெய்ய அந்நகரில் மின்துண்டிப்புகள் இடம்பெற்று வருவதால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
கராச்சி நகரிலுள்ள ஜின்னா மருத்துவமனையின் தலைவர் கூறுகையில், வெப்பத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் அனேகர் வயோதிபர்கள் எனத் தெரிவித்தார். கடந்த சனிக்கிழமையிலிருந்து அனல் காற்றால் கராச்சி நகரில் மட்டும் 114 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றுத் திங்கட்கிழமை வரை வீசிய இந்த அனல் காற்று இன்று செவ்வாய்க்கிழமையும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக பாகிஸ்தானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்படி அனல் காற்றால் அயல்நாடான இந்தியாவில் சுமார் 1,700 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.