நகர மேயர் ஒருவர் முதலையொன்றைத் திருமணம் செய்த சம்பவம் மெக்ஸிக்கோவில் இடம்பெற்றுள்ளது.
சான்ட் பெட்ரோ ஹுவாமெலுலா நகர மேயர் ஜோயல் வஸ்குயஸ் ரொஜஸ், மரியா இஸபெல் (3 வயது) என்ற முதலை இளவரசியைத் திருமணம் செய்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த திருமணம் குறித்து சர்வதேச ஊடகங்கள் வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
நகர மேயர் முதலையொன்றைத் திருமணம் செய்தால் அந்நகரில் வாழும் மீனவர்களுக்கு பெருமளவில் மீன்களும் கடல் உணவுகளும் கிடைப்பனவாகும் என்ற நம்பிக்கை பிராந்திய மக்களிடையே நிலவுவதால் இத்தகைய திருமணம் அங்கு வருடாந்தம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த பாரம்பரிய திருமண வைபவத்தின் முதல் கட்டமாக மணப்பெண்ணான முத லைக்கு ஞானஸ்நானம் செய்துவைக்கப்பட் டது. அதன்பின் அந்த முதலை மணப்பெண் ஆடை அணிவிக்கப்பட்டு திருமணம் நடை பெறும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அந்த முதலை, மணமகனையும் திருமணத்தில் கலந்துகொண்ட ஏனையவர்களையும் கடித்துக் குதறாமல் இருக்க அதன் வாயைச் சுற்றி நாடாவால் கட்டப்பட்டிருந் தது.
இதன்போது மணமகனான ரொஜஸ் மணமகளுக்கு திருமண உறுதிமொழியை அளித்தார்.
இந்த திருமண நிகழ்வில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர்.திருமண விருந்துபசாரத்தையடுத்து மணமகன், தனது புதிய மனைவியான முதலையை அங்குமிங்கும் நகர்த்தி அதனுடன் நடனமாடுவதில் ஈடுபட்டார்.
கடந்த ஆண்டு இடம்பெற்ற மேற்படி பாரம்பரிய திருமண நிகழ்வில் ரொஜஸ் திருமணம் செய்த முதலைக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.