
கல்முனை பகுதியில் வைத்து மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் கல்முனை வைத்தியசாலைக்கு சென்ற மாணவியே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்மாந்துறை போரக் கோயில் தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர் தரம் கற்கும் ஜோசப் காஞ்சனா (வயது 17) என்ற மாணவியே காணாமல் போயுள்ளதாக அவரது தாய் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
வெள்ளிக்கிழமை மாலை கல்முனை தேவாலயத்தில் பிரார்த்தனைக்குச் சென்றுவிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் மருந்தெடுப்பதற்காக குறித்த மாணவியும் அவரது தாயும், தங்கையும், அயல் வீட்டில் வசிக்கும் சிறுவனும் சென்றுள்ளனர்.
அப்பொழுது வைத்தியசாலைக் காவலாளி எல்லோரும் உள்ளே செல்ல முடியாது சிகிச்சை பெறும் நோயாளியும் உதவிக்கு இன்னொருவரும் மாத்திரமே உள்ளே செல்ல முடியும் என்று கூறியுள்ளார்.
அதன்படி தாயும் தங்கையும் வைத்தியசாலையின் உள்ளே செல்ல குறித்த யுவதியும் பக்கத்து வீட்டுச் சிறுவனும் வைத்தியசாலை நுழைவாயில் கதவடியில் நின்றுள்ளனர்.
அப்பொழுது அங்கு நின்ற யுவதி திடீரெனக் காணாமல் போயுள்ளார்.
இச்சம்பவம் குறித்து கல்முனைப் பொலி ஸுக்கு முறைப்பாடு கிடைத்ததும் பொலிஸார் துரித விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.





