என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி : ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் மனு!!

466

Rajani

நடிகர் ரஜினிகாந்த் தன்னிடம் பணம் பறிக்க முயற்சி நடப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

சென்னையை சேர்ந்த எஸ்.முகுன்சந்த் போத்ரா, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திரைப்பட இயக்குனர் கஸ்தூரிராஜா, என்னிடம் கடந்த 2012ம் ஆண்டு பல லட்சம் கடன் வாங்கினார்.

அப்போது, தன் மகன் தனுஷ், நடிகர் ரஜினிகாந்தின் மகளை திருமணம் செய்ததால், நான் பணம் தரவில்லையென்றாலும், என் சம்பந்தி கொடுத்து விடுவார் என்று எழுதிக் கொடுத்து பணத்தை வாங்கினார்.

பின்னர், கடன் தொகையை காசோலையாக திருப்பிக் கொடுத்த போது, கஸ்தூரிராஜாவின் வங்கி கணக்கில் பணம் இல்லை என்று காசோலை திரும்பி வந்தது.

இதையடுத்து அவர் மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்ததோடு, ரஜினிகாந்த் வீட்டை தொடர்புகொண்டு கேட்ட போது, பலர் ரஜினிகாந்த் பெயரை தவறாக பயன்படுத்துகின்றனர் என்று பதில் வந்ததால், 2012ம் ஆண்டு கஸ்தூரிராஜா பணம் வாங்கி மோசடி செய்ததாக பொலிசில் புகார் செய்தேன்.

அந்த புகாரை விசாரித்த பொலிசார், இது ‘சிவில்’ பிரச்சனை என புகாரை முடித்து வைத்து விட்டனர்.

இதற்கிடையில், ‘மேன் ஹூன் ரஜினிகாந்த்’ என்ற இந்தி படத்துக்கு தடை கேட்டு ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்தபோது, அந்த வழக்கில் நானும் மனு தாக்கல் செய்தேன்.

அப்போது, ரஜினிகாந்த் தாக்கல் செய்த பதில் மனுவில், தன் பெயரை பயன்படுத்த யாருக்கும் அனுமதி வழங்கவில்லை என்று கூறினார்.

அந்த பதிலை முன்பே அவர் தெரிவித்திருந்தால், கஸ்தூரிராஜா மீது நான் கொடுத்த புகாரை பொலிசார் ‘சிவில்’ பிரச்சனை என்று கூறியிருக்க மாட்டார்கள்.

ரஜினிகாந்தும், கஸ்தூரிராஜாவும் கூட்டுச் சேர்ந்து செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

எனவே, தன் பெயரை தவறாக பயன்படுத்திய தன் சம்பந்தி கஸ்தூரிராஜா மீது நடவடிக்கை எடுக்க ரஜினிகாந்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, ரஜினிகாந்த் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், முகுல்சந்த் போத்ரா தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும். இந்த வழக்கை கெட்ட எண்ணத்துடன் எனக்கு எதிராக போத்ரா தாக்கல் செய்துள்ளார்.

என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும், என்னிடம் பணம் பறிக்கவும் அவர் முயற்சிக்கிறார்.

அவருடன் எனக்கு எந்த வகையிலும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. கடன் வாங்க நான் உத்தரவாதம் எதுவும், யாருக்கும் அளிக்கவில்லை.

கஸ்தூரி ராஜா மீது நான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். இப்படிப்பட்ட கோரிக்கையுடன் வழக்கை தாக்கல் செய்ய முடியாது.

இதுபோன்ற வழக்கை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். மனுதாரருக்கு அபராதமும் விதிக்க வேண்டும்.

கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக மனுதாரர் தொடர்ந்த செக் மோசடி வழக்கை ஏற்கனவே ஜார்ஜ் டவுண் நீதிமன்ரம் தள்ளுபடி செய்துவிட்டது.

வேண்டுமென்றே எனக்கு எதிராக இந்த வழக்கை மனுதாரர் தொடர்ந்துள்ளார்.

இதனால், என்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதோடு, எனக்கு மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த மனுவுக்கு உடனடியாக போத்ரா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.