
அம்பாறை தாண்டியடி பிரதேசத்தில் யுவதி ஒருவரை பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு பொத்துவில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட ஒருவரை பொத்துவில் நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஐ. பயாஸ் றஸாக் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, கடந்த 07 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை குறித்த யுவதியின் தாயும் தந்தையும் வைத்தியசாலைக்கு சென்ற வேளையில் வீட்டில் தனிமையில் இருந்த 26 வயதுடைய யுவதியிடம் கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை தனக்கு அனுப்புமாறு குறித்த நபர் கேட்டுள்ளார். தொலைபேசியின் இலக்கத்தை வழங்க மறுத்த யுவதியின் வீட்டுக்குள் நுழைந்த அயல் வீட்டு இளைஞன் யுவதியின் மீது பாலியல் பலாத்காரம் புரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட யுவதி திருக்கோவில் பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை பொலிஸார் பொத்துவில் நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஐ. பயாஸ் றஸாக் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட யுவதி அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.





