ஹரியானாவைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள், உலகின் 7 கண்டங்களிலும் உள்ள 7 உயர்ந்த சிகரங்களில் ஒன்றாக ஏறி சாதனை படைத்துள்ளனர்.
ஹரியானாவைச் சேர்ந்த டஷி மற்றும் நுங்ஷி மாலிக் என்ற இரட்டைச் சகோதரிகள் மலையேற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது இந்த சகோதரிகள் உலகின் 7 கண்டங்களிலும் உள்ள 7 உயர்ந்த சிகரங்களில் ஒன்றாக ஏறி சாதனை படைத்துள்ளதன் மூலம், சாகசக்காரர்களுக்கான கிராண்ட்ஸ்லாம் என்கிற விருதினை வென்றிருக்கின்றனர்.
அவர்கள் ஆபிரிக்காவின் கிளிமாஞ்சாரோ மலைச்சிகரம், ஐரோப்பாவின் எல்பர்ஸ் மலைச்சிகரம், தென் அமெரிக்காவின் அகோன்காகுவா மலைச்சிகரம், ஓசியானாவின் கார்ஸ்டென்ஸ்ஸ் பிரமிட் மலைச்சிகரம், அலாஸ்காவின் மெக்கின்லே மலைச்சிகரம் மற்றும் அண்டார்டிக்காவின் உயரமான வின்சன் மலைச்சிகரங்களில் ஏறி வெற்றிகொண்டுள்ளனர்.
உலகின் முதல் இரட்டை சகோதரிகளாக இவர்கள் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவர்கள் ஏழு கண்டங்களின் மலைச்சிகரங்கள் மற்றும் வட துருவத்திலிருந்து தென் துருவத்திற்கு பனிச்சறுக்கு என பல்வேறு தேசிய மற்றும் மண்டல சாதனைகளை செய்துள்ளனர்.
கின்னஸின் 60வது பதிப்பில் இடம் பெற்ற இவர்கள், ஹரியானாவின் பெண் குழந்தை பாதுகாப்பு அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சகோதரிகளின் சாதனைகளைப் பற்றி மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு கூறுகையில், பெண் சிசுக் கொலை மற்றும் கல்வியறிவின்மை உள்ள நம் நாட்டில் இளைய சமூகத்தின் முன் மாதிரியாக இவர்கள் விளங்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.