உலக மக்கள் தொகை தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி இந்தியாவின் மக்கள் தொகை பற்றிய அறிக்கையை தேசிய மக்கள் தொகை நிதியம் வெளியிட்டது.
அதன்படி நேற்று மாலை 6.30 மணி அளவில் இந்தியாவின் மக்கள் தொகை 127 கோடியே 42 இலட்சத்து 42 ஆயிரத்து 780 ஆக இருந்தது.
இது குறித்து மக்கள் தொகை நிதியத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை, உலக மக்கள் தொகையில் 17.25 சதவீதம் ஆகும். தற்போது 139 கோடி மக்கள் தொகையுடன் முதலிடத்தில் சீனா உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நமது நாட்டில் மக்கள் பெருக்கம் 1.6 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து வருகிறது. இதேவேகத்தில் அதிகரித்துக்கொண்டே போனால் 2050ம் ஆண்டு இந்திய மக்கள்தொகை 163 கோடியாக உயர்ந்து சீனாவை மிஞ்சி விடும். இது மிகவும் கவலை தரும் விஷயமாகும். இதனால் மக்கள் தொகை பெருக்கம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் நாட்டில் ஏற்படும், இவ்வாறு கூறினார்.
டெல்லி விஞ்ஞான பவனில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா பேசும்போது, ‘‘மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தனது இலக்கை அடைவதற்கு தொண்டு நிறுவனங்களும், நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களும் உதவிடவேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.