கிளிநொச்சியில் சிறுமியின் சடலம்: காணாமற்போயுள்ள உடற்பாகங்களை மீட்டுத்தருமாறு கோரிக்கை!!

416

Girl

கிளிநொச்சியில் காணாமற்போன மூன்று வயது சிறுமியுடையது என சந்தேகிக்கப்படும் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், சடலத்தின் பாகங்கள் பல காணாமற்போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி – உருத்திரபுரம், எள்ளுக்காடு பகுதியில் கடந்த மாதம் 21ஆம் திகதி சந்திரகுமார் ஜெருசா காணாமற்போயிருந்தார்.

எள்ளுக்காடு பகுதியிலுள்ள ஓடைக்கு, தமது உறவு முறை சகோதரனுடன் சென்ற வேளையிலேயே சிறுமி காணாமற்போயிருந்ததாக பொலிஸ் முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த 19ஆம் திகதி எள்ளுக்காடு பகுதியிலுள்ள வயல்வெளியொன்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் சடலமொன்று பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டது.

சந்திரகுமார் ஜெருசா காணாமற்போன தினம் அணிந்திருந்த ஆடைகள் கண்டெடுக்கப்பட்ட சடலத்திற்கு அருகிலிருந்து மீட்கப்பட்டமையினால், சடலம் குறித்த சிறுமியினுடையது என உறவினர்கள் தெரிவித்தனர்.

எனினும், இந்த சடலத்தின் தலைப்பகுதி கண்டெடுக்கப்படவில்லை எனவும், இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தி தலையைத் தேடித் தருமாறும் உறவினர்கள் பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சடலத்தின் பாகங்கள் முழுமையாக தேடிப் பிடிக்கப்படாத பட்சத்தில் சடலத்தை தாம் பொறுப்பேற்கப் போதில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.