வீட்டுத்திட்டம் உள்ளிட்ட தமக்கான அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி, வவுனியா புளியங்குளம் தெற்கு பகுதியைச் சேர்ந்த குட்டிப்பிள்ளையார் குடியிருப்பு, கல்மடு, இராமர் புளியங்குளம், பழையவாடி, புளியங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யுத்தம் காரணமாக தாம் இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய போதும் தமக்கான அடிப்படை வசதிகள் எவையும் இதுவரை செய்து தரப்படவில்லை என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக தமது கிராமத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட வீட்டுத்திட்டம் அமைச்சர் ஒருவரின் தலையீட்டினால் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், மழைகாலம் தொடங்கவுள்ளதால் வீடுகள் இன்றி அவலப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் தமது கிராமத்திற்கான மின்சாரம் முழுமையாக வழங்கப்படவில்லை எனவும் இதனால் காட்டில் இருந்து வரும் யானை உள்ளிட்ட ஆபத்தான விலங்குகளின் தாக்குதல்களிலிருந்து தப்பித்து வாழ்வதற்காக தினமும் இருட்டில் பாதுகாப்புக்காக போராடி வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும், தமது பிரதேசத்திற்கான வீதியைப் புனரமைத்து தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை, ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் இம்மக்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய ஜனாதிபதிக்கான மகஜரினையும் கையளித்திருந்தனர்.






