இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 5ஆவதும் இறுதியுமான சர்வதேச ஒரு நாள் போட்டி ஹம்பாந்தோட்டை சூரியவெவ கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
சொந்த மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர் இரண்டையும் பறிகொடுத்துள்ள நிலையில், இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி இப்போட்டியில் வெற்றி பெற்று ஒரு நாள் தொடரை 3 க்கு 2 என்ற கணக்கில் நிறைவு செய்ய கடுமையாக முயற்சிக்கும்.
கடந்த நான்கு போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருப்பினும், இலங்கை கிரிக்கெட் அணியின் செயற்பாடுகள் திருப்திகரமாக அமையவில்லை.
துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு ஆகிய சகல துறைகளிலும் இலங்கை அணி மெத்தனப்போக்குடனேயே விளையாடியிருந்தது. இலங்கை அணியின் மத்திய வரிசை மேலும் பலமிக்கதாக அமையவேண்டும். பாரியளவிலான இணைப்பாட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.
சொந்த மண்ணில் விளையாடுவதால் இலங்கை அணி இத்தொடரை இலகுவாக கைப்பற்றிவிடும் என எண்ணிய இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே கிடைத்தது.
அனுபவ பந்துவீச்சாளரான லசித் மலிங்க மீண்டும் தனது பழைய ஆற்றல் திறனுக்கு வரவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனினும், அவர் இன்றைய போட்டியில் இலங்கை அணியில் இணைத்துக்கொள்ளப்படுவாரா என்பது சந்தேகமாகவுள்ளது.
பாகிஸ்தான் அணியுடனான 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் அவரின் பங்களிப்பு முக்கியம் என்பதால் அவருக்கு ஓய்வளிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, அஸார் அலி தலைமையிலான இளம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் மிகவும் சிறப்பாக விளையாடி இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளனர்.
4 போட்டிகளின் நிறைவிலேயே பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை கைப்பற்றியுள்ளமையால், இன்றைய போட்டியை உற்சாகத்துடனும் துணிச்சலுடனும் எதிர்க்கொள்ளக் காத்துள்ளது.