கிளிநொச்சி – உருத்திரபுரம் பகுதியில் காணாமல் போய் சுமார் ஒரு மாதத்தின் பின்னர் எலும்புக் கூடாக வீட்டுக்கு அருகே உள்ள வயல் வெளியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மூன்று வயதுடைய உதய குமார் யர்ஷிகா என்ற குழந்தையின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவரது உறவுக்கார சகோதரன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
14 வயதுடைய மாணவன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் அவரை நேற்றைய தினம் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்தியதாகவும் இதன் போது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதிவரை அம்மாணவனை அச்சுவேலி சிறுவர் தடுப்பு முகாமில் தடுத்து வைக்க நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார்.
கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி குறித்த 3 வயதான யர்ஷிகா என்ற சிறுமி காணாமல் போயிருந்தார். வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் தாயாருடன் குளிக்கச் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த சகோதர உறவு முறையிலான ஒருவரால் குளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் பின்னர் தாயார் அங்கு சென்று பார்த்த போது அவர் காணாமல் போயிருந்ததாகவும் கிளிநொச்சி பொலிஸாருக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந் நிலையிலேயே கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி குறித்த சிறுமி எலும்புக் கூடாக மீட்கப்பட்டார். யாழ். வைத்தியசாலையில் இது தொடர்பிலான மேலதிக பரிசோதனைகள் இடம்பெற்று வரும் நிலையில் சிறுமியை இறுதியாக அழைத்துச் சென்ற சகோதர முறை உறவினரான 14 வயது சிறுவனே இரு நாட்களுக்கு முன்னர் சந்தேகத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அச்சிறுவனை தடுத்து வைத்து விசாரணை செய்து வந்த கிளிநொச்சி பொலிஸார் நேற்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதுடன் மன்றின் உத்தரவுக்கு அமைய அச்சுவேலி சிறுவர் தடுப்பு முகாமில் தடுத்து வைத்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசேட விசாரணை ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.