போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க இலங்கையில் புதிய மையம்!!

314

1098503007drugs

 

தென் இந்திய கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்படும் போதைப் பொருள் கடத்தலை கண்காணிக்கும் மத்திய நிலையமொன்று இலங்கையில் நிறுவப்படவுள்ளதாக தேசிய அபாயகர மருந்து கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் நிலங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியா – இலங்கைக்கு இடையிலான போதைப் பொருள் பரிமாற்றம் பெரும்பாலும் தென் இந்திய கடற்பரப்பினூடாகத்தான் மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்த சமரசிங்க, இதைத் தடுப்பதற்காகவே பிராந்திய தகவல் நிலையமொன்றை அமைப்பதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக இந்தியா விஷேச ஒத்துழைப்பை அளித்துவருவதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும் போதைப் பொருட்கள் மீனவப் படகுகள் மூலமே இலங்கைக்குள் கொண்டுவரப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்திய கடற்பரப்பினூடாக முன்னெடுக்கப்படும் போதைப் பொருள் கடத்தலை தடுக்கும் நோக்குடன், இந்திய, பாகிஸ்தான் , நேபாளம், பர்மா, மாலத் தீவு மற்றும் இலங்கைக்கு இடையில் பிராந்திய ஒப்பந்தமொன்றை ஏற்படுத்தப் போவதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்தியாவின் உதவியுடன் ஆசிய தகவல் பறிமாற்ற சபை ஒன்றை இலங்கையில் நிறுவ நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கையிலுள்ள போதைப் பொருள் வர்த்தகர்கள் ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணுகின்றனர் என்றும் இந்த நிலை மாறினால்தான் போதைப் பொருள் வர்த்தகத்தை முழுமையாக தடுக்க முடியும். என்றும் நிலாங்க சமரசிங்க தெரிவித்தார்.