என்னுடைய கதையை லிங்குசாமி கொப்பியடித்துவிட்டார் என இயக்குனர் சீமான் இயக்குனர்கள் சங்கத்தில் கொடுத்த புகாரால் சங்கம் கலகலத்து போயுள்ளது.
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா விரைவில் ஒரு படம் நடிக்கிறார். படத்தின் பெயர், கதாநாயகி, தொழில்நுட்பக் கலைஞர்கள் என எதுவும் உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் லிங்குசாமி படத்தின் கதை இதுதான் என்று இரண்டுவரி கதை ஒன்று ஊடகங்களில் பிளாஷானது.
மருத்துவராக இருக்கும் சூர்யா மக்களுக்கு நல்லது செய்கிறார். மருத்துவராக இருந்தால் ஒரு குறிப்பிட்ட எல்லைவரையே மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என பொலிஸ் அதிகாரியாக மாறுகிறார். இதுதான் அந்த இரண்டுவரி கதை.
சீமான் பல வருடங்களாக சொல்லிக் கொண்டிருக்கும் பகலவன் படத்தின் ஒன்லைனும் இதுதான். மருத்துவராக இருக்கும் கதாநாயகன் பொலிஸ் அதிகாரியாக மாறி அநியாயத்தை வேரறுப்பது.
விஜய், ஜீவா இருவரும் பகலவனில் இருந்து விலகிய நிலையில் தற்போது ஜெயம் ரவியை வைத்து பகலவனை எடுக்கும் முடிவில் இருக்கிறார் சீமான். இந்நிலையில் பத்திரிகையில் லிங்குசாமியின் கதையை பற்றிய விவரம் தெரிந்ததும் கடும் அதிர்ச்சிடைந்தவர் இயக்குனர்கள் சங்கத்தில் புகார் தந்திருக்கிறார்.
சீமான் பகலவன் கதையை பல வருடங்களாக பலரிடம் சொல்லி வந்தது அனைவருக்கும் தெரியும் என்பதால் லிங்குசாமி சூர்யாவுக்காக புதிய கதை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இப்படியொரு சர்ச்சையில் சிக்கிய பின் சூர்யா லிங்குசாமியின் கதையில் நடிப்பாரா என்பதும் சந்தேகமே.